பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் இந்திய அணியின் கேப்டன் பும்ரா இணைந்து முதல் டெஸ்ட் போட்டியின் துவக்கத்திலேயே வரலாற்று சாதனை படைத்தனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் கடந்த 1996 முதல் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 56 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று உள்ளன. இதில் முதல்முறையாக இரண்டு அணிகளின் கேப்டனாக முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். இப்படி நடப்பது இதுவே முதல் முறை ஆகும். அந்த வகையில் இது வரலாற்று நிகழ்வாக பதிவாகி உள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவே இருக்கிறார். ஆனால், அவர் தனது இரண்டாவது குழந்தை பிறப்பை ஒட்டி விடுப்பில் இருக்கிறார்.
அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பும்ரா தற்காலிக கேப்டனாக பதவி ஏற்றார். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மற்றும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் கேப்டன்களாக செயல்பட்டு பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இதற்கு முன் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த வேகப் பந்துவீச்சாளர் என்றால் அது கபில் தேவ் தான். அவர் 1983 முதல் 1987 வரை இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதன் பின் 35 ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா முன்பே ஒரு போட்டியில் கேப்டனாக செயல்பட்டு இருந்தார். மீண்டும் கேப்டனாக தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளார் பும்ரா.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி பெர்த் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் கேப்டனாக டாஸ் வென்ற பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது.