அடிலெய்டு: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளருமான பும்ரா கிரிக்கெட்டில் தான் எப்படி வளர்ந்தது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியிருந்தார். அப்போது தனது பவுலிங் ஆக்ஷனை பார்த்த பல பயிற்சியாளர்கள் ஆறு அல்லது ஏழு மாதங்கள் கூட இவரால் தாக்குப் பிடிக்க முடியாது என கூறியதாக வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அவர் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது இதுதான் - "நான் மிக தாமதமாக தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். நான் ஆறு அல்லது ஏழு வயதில் விளையாட துவங்கவில்லை. அதுவே நான் மிக விரைவில் வேகப் பந்துவீச்சில் சோர்வடையாமல் இருந்ததற்கு காரணம். நான் 16, 17 வயதில் தான் விளையாடத் துவங்கினேன். தொலைக்காட்சியை பார்த்து தான் நான் கிரிக்கெட் விளையாட முயன்றேன்."

"எனக்கு முறையான பயிற்சியாளர்கள் என யாரும் இல்லை. நான் அனைத்தையும் தொலைக்காட்சியை பார்த்து கற்றுக் கொண்டேன். எப்படியோ அதில் இருந்து நுணுக்கங்களையும், எனக்கான தீர்வுகளையும் நானே கற்றுக் கொண்டேன். இதுநாள் வரை அது எனக்கு சரியாக வேலை செய்கிறது. நான் இப்போது ஒரு அமைப்புக்குள் வந்து விட்டேன். இப்போது எனது உள்ளுணர்வையும், தைரியத்தையும் சார்ந்து இருக்கிறேன்."
"நான் இளம் வயதில் கிரிக்கெட் விளையாடிய போது அங்கு மேஜைகள் இருக்கும். அதை தாண்டி நம்மால் செல்ல முடியாது. அதுதான் அந்த போட்டியின் பவுண்டரி எல்லையாக இருக்கும். அங்கிருந்து நான் ஓடி வருவேன். நீண்ட தூரம் ஓட முடியாது. நான் மைதானத்தில் கிரிக்கெட் ஆடத் துவங்கிய பிறகு நீண்ட தூரம் ஓடி வர முயன்றேன். ஆனால், அப்படி நீண்ட தூரம் ஓடி வந்தாலும் எனது வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, நான் குறைந்த தூரத்தில் மட்டுமே ஓடி வருகிறேன்."
"அதன் மூலம் நமது சக்தியை சேகரித்து இன்னும் அதிக வேகத்தில், நீண்ட நேரம் பந்து வீசலாம் என்று நான் நினைத்தேன். அது எனது பவுலிங்கில் எந்த மாற்றத்தையும் இதுவரை கொண்டு வரவில்லை. அதனால் அப்படியே இருக்க முடிவு செய்து விட்டேன். எனது பவுலிங்கை நிறைய பேர் நம்பவில்லை. எனது பவுலிங் ஆக்ஷனை வைத்துக் கொண்டு நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என நினைத்தார்கள்."
"நான் ஆறு அல்லது ஏழு மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் என நினைத்தார்கள். அதனால் எனக்கு பயிற்சி அளிக்க பலரும் முன் வரவில்லை. சிலர் எனது பவுலிங் ஆக்ஷனை நிறுத்த வேண்டும் என்றார்கள். என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், அது எனக்கு சாதகமாகவே இருந்தது. இப்போது நான் என்னை நானே சார்ந்து இருக்கிறேன்."
"எனக்கு தன்னம்பிக்கை இருப்பதோடு, எனக்குத் தேவையான தீர்வுகளையும் நானே கண்டுபிடித்துக் கொள்கிறேன். என்னை யாரும் மாற்றவும் முயலவில்லை. அதனால், எனக்கு கூடுதல் தீர்வுகளையும் யாரும் சொல்லவில்லை. அது எனக்கு சாதகமாகவே இதுவரை இருந்துள்ளது. நம்மை நாமே சார்ந்து, தன்னம்பிக்கையுடன் இருக்க அது எனக்கு உதவி இருக்கிறது." என்றார் பும்ரா.