பெர்த்: ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டியில் இந்திய அணியின் முதன்மை பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நவம்பர் 18 அன்று ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்ததால் இந்திய அணியின் கேப்டன் யார்? என்ற குழப்பம் நீடித்து வந்தது.
ரோஹித் சர்மா இந்த தொடரின் முதல் போட்டிக்கு முன் ஆஸ்திரேலியா செல்ல மறுத்துவிட்டதால் இந்திய அணி நிர்வாகம் ஜஸ்பிரித் பும்ராவை முதல் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக்க முடிவு செய்து இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22 முதல் துவங்க உள்ளது.

இந்தத் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்பட்டு இருந்தது. அவர் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருந்ததால் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில். மூன்று நாட்களுக்கு முன்பு ரோஹித் சர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதை அடுத்து அவர் விரைவில் ஆஸ்திரேலியா செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க விரும்பவில்லை எனவும், இரண்டாவது போட்டியில் இருந்து பங்கேற்க முடிவு செய்திருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
அதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாமல் விளையாடுவதற்கான திட்டங்களை இந்திய அணி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி ரோஹித் சர்மாவுக்கு பதிலாக டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பும்ரா அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட இருக்கிறார். ரோஹித் சர்மாவுக்கு பதில் துவக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்க இருக்கிறார்.