பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மீண்டும் கவலைக்கிடமாக இருக்கும் அதே சமயம், மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒன்றும் அடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் இந்த போட்டியில் பாதியில் விலகி இருக்கிறார்.
அவருக்கு காலில் சாயம் ஏற்பட்டது. அதனை அடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் இந்த போட்டியில் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இதை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்துவார்களா? என்ற கேள்வியும் உள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்திய அணி போராடி ஃபாலோ ஆனை தவிர்த்தது. ஜோஷ் ஹேசல்வுட் இல்லாததும் அதற்கு முக்கிய காரணம்.
ஜோஷ் ஹேசல்வுட் முதல் இன்னிங்ஸில் ஆறு ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் பின்னங்காலில் ஏற்பட்ட வலியின் காரணமாக தொடர்ந்து பந்து வீசவில்லை. தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட உள்ளது.
அவர் மேலும் பந்து வீசினால் அவரது காயம் மோசம் அடையலாம் என்ற சூழ்நிலையில் அவர் இந்த போட்டியில் இனி பந்து வீச மாட்டார் எனவும் கூறப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் என இரண்டு முழு நேர வேகப் பந்து வீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர்.
ஜோஷ் ஹேசல்வுட் இல்லாத நிலையில் சசுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் அதிக ஓவர்களை வீச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். மூன்றாவது போட்டி நடைபெற்று வரும் காபா மைதானத்தில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக வேலை இல்லை. அங்கு சுழற் பந்துவீச்சாளர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
அதை பயன்படுத்தி இந்திய வீரர்கள் நாதன் லியோனின் ஓவர்களில் ரன்களை சேர்க்கலாம். பகுதி நேர வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் மார்ஷ் ஓவர்களிலும் கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி அதிக ரன் சேர்த்தது. அதே போல இப்போதும் அவர் ஜோஷ் ஹேசல்வுட்-டுக்கு மாற்றாக அதிக ஓவர்களை வீசுவார்.
அப்போது அவரது ஓவர்களில் இந்திய வீரர்கள் ரன்களை சேர்க்கலாம். மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஓவர்களில் மட்டும் இந்திய வீரர்கள் சற்று கவனமாக ஆடினாலே இந்த போட்டியில் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து, ரன் சேர்க்கலாம்.
ஐந்தாவது நாள் ஆட்டத்திலும் அவ்வப்போது மழை குறுக்கிடும் என்பதால் இந்த போட்டியை இந்திய அணி டிரா செய்ய முயற்சிக்கலாம். ஜோஷ் ஹேசல்வுட் இல்லாத சூழ்நிலையை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்களா? என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.
மழையும் இந்திய அணிக்கு சாதகமாகவே உள்ளது. நான்காம் நாள் ஆட்டத்தின் பெரும் பகுதி மழையால் தடைபட்டது.ஐந்தாம் நாள் அன்றும் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.எனவே, இந்திய அணி டிரா செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.