பெர்த்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு முன் வயதான வீரர்கள் பற்றிய விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். தற்போது ஆட உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் பல மூத்த வீரர்கள் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் அடுத்த சில ஆண்டுகளில் வரிசையாக ஓய்வு பெறும் வயதை எட்டி உள்ளனர்.இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் இதுவே கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என கூறப்படுகிறது.

எனினும் வயதான வீரர்கள் என அவர்களை ஒதுக்கி விட முடியாது என ஜஸ்டின் லாங்கர் எச்சரித்து இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "சாம்பியன் வீரர்களை, "நீங்கள் அவ்வளவு தான்" என ஒதுக்கி தள்ளிவிட முடியாது. அவர்கள் ஒரு காரணதிற்காகவே சாம்பியனாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வயதாகி விட்டால் அவர்கள் அவ்வளவுதான் என மக்கள் ஒதுக்கி விடுகிறார்கள்." என்றார்.
"இதுதான் விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் கடைசி தொடர் என்றால் அதை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும். இதே தான் ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கும். ஆஸ்திரேலியா அணியும் இதே நிலையில்தான் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு குழு இப்போது மிகவும் மூத்த பந்து வீச்சு குழுவாக மாறி இருக்கிறது. அவர்கள் இனியும் தொடர்ந்து விளையாடுவார்களா? என தெரியாது. எனவே, முடிந்த வரை அதை பார்த்து ரசியுங்கள்" என்றார்.