மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு சென்று இந்தியா ஏ அணியுடன் இணையும் இருவரும், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. சொந்த மண்ணிலேயே இந்திய அணி தோல்வியடைந்திருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சில சிக்கல் எழுந்துள்ளன. அதாவது ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அப்படி கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணியால் மற்ற அணிகளின் தயவின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியும். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி வீரர்கள் ஒரு வாரம் ஓய்வுக்கு பின் பயணிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அங்கு எந்தப் பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடவில்லை.
ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இந்தியா ஏ அணியுடனான பயிற்சிப் போட்டியையும் ரத்து செய்துவிட்டனர். இதனால் இளம் வீரர்கள் பலரும் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக விளையாடுவதால், நேரடியாக போட்டியில் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கடைசி 2 போட்டிகளிலும் விளையாடாத கேஎல் ராகுல், துருவ் ஜுரெல் இருவரையும் நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அங்கு இந்தியா ஏ அணியுடன் இருவரும் இணைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் நவ.7ஆம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக இருவரையும் விளையாட வைப்பதே திட்டமாகும். இதன் மூலம் இருவருக்கும் போதுமான கேம் டைம் கிடைக்கும் என்று தேர்வுக் குழு நம்புகிறது.
அதேபோல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 19 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்திய அணியை 2 பேட்ச்-ஆக பிரித்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் திட்டமும் பிசிசிஐ செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.