சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வழக்கம் போல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். கேப்டனாக இருந்த ரோகித் சர்மா சரியாக பேட்டிங் செய்யவில்லை என்ற காரணத்தால் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் தொடக்க வீரராக கே.எல். ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இன்று களமிறங்கினர். டாஸ் வென்ற கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் சிட்னி ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆடுகளத்தில் புற்கள் கொஞ்சம் இருந்தது.

மேலும் வானமும் மேகமூட்டத்துடன் இருந்ததால் முதல் சில மணி நேரத்தில் இந்திய அணி பொறுமையாக விளையாடி, அதன் பின் பந்து பழையதாக மாறியவுடன் ரன்குவிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் வழக்கம் போல் இந்திய அணி வீரர்கள் தேவையில்லாத ஷார்ட் அடி ஆட்டம் இழந்தனர். குறிப்பாக கேஎல் ராகுல் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு வந்தார்.
அப்போது தேவையில்லாமல் ஒரு ஷார்ட் ஆஸ்திரேலியா விரித்த வலையில் எலி போல் சிக்கினார்.கே எல் ராகுல் ஸ்டார்க் பந்து வீச்சில் நான்கு ரன்களில் வெளியேறினார். இந்த தொடரில் அபாரமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 26 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தபோது போலந்து பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் இந்திய அணி 17 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. சிட்னி ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி பெரிய ரன்களை எடுத்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருக்கும். ரோகித் சர்மா சரியாக விளையாடவில்லை என இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தால், அவர்களும் சொதப்பி இருப்பது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.
இப்படி இந்திய வீரர்கள் பொறுப்பின்றி விளையாடுவதற்காக தான் தாங்கள் காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து மேட்சை பார்க்கிறோமா என்று ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்கள். இதற்கு ரோகித் சர்மாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கலாம் என்றும் பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.