பெர்த்: இந்திய அணியின் கேஎல் ராகுல் அவரின் திறமை மீது நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக்கில் ஹசி அட்வைஸ் கூறியுள்ளார். விமர்சனங்களை நினைத்து கவலை கொள்ளாமல், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயாராவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், அந்த பொறுப்பை ஜஸ்பிரிட் பும்ரா எடுத்து கொண்டுள்ளார்.

அதேபோல் தொடக்க வீரராக கேஎல் ராகுலை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் ஒரேயொரு சதம் மட்டுமே விளாசி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் அவரின் பேட்டிங் சராசரி 21 ரன்களுக்கும் கீழாகவே உள்ளது. இதனால் கேஎல் ராகுலின் பேட்டிங் மீது ரசிகர்கள் பலரும் நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறி வருகின்றனர்.
அதற்கேற்ப ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேஎல் ராகுல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதேபோல் இந்திய ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்திலும் கேஎல் ராகுல் காயமடைந்து 2 நாட்கள் ஓய்வில் இருந்தார். இதன்பின் கடைசி நாள் பயிற்சியில் கலந்து கொண்டாலும், கேஎல் ராகுல் மனதளவில் நம்பிக்கையுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக்கில் ஹசி இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு அட்வைஸ் ஒன்றை அளித்துள்ளார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களில் கேஎல் ராகுலும் ஒருவர். ஆனால் அவர் தனது திறமை மீதும், பேட்டிங் மீதும் நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும். அவரின் கிளாஸ் என்னவென்று அனைவருக்கும் தெரியும்.
ஏற்கனவே கேஎல் ராகுல் குறித்து வெளியில் அதிகளவிலான விமர்சனங்கள் வருகிறது. அது அவரின் மனதிலும், மூளையிலும் சில சந்தேகங்களை எழுப்பும். அதற்கு கவனம் கொடுக்காமல், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயாராவதில் கவனம் செலுத்த வேண்டும். அவரின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினால், உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டராக அவர் இருப்பார்.
பெர்த் டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் போட்டியில் ரன்கள் சேர்த்தால், நிச்சயம் தொடர் முழுக்க சிறப்பாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த போது முதல் 2 போட்டிகளிலும் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கேஎல் ராகுல் வெளியேற்றப்பட்டார்.