பெர்த்: இந்திய அணியின் மூத்த வீரர் கே எல் ராகுல் ஜெய்ஸ்வாலுக்கு ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய உதவி செய்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றி கே எல் ராகுல் பேசுகையில், தனக்கு அன்று முரளி விஜய் உதவி செய்தார். இப்போது நான் ஜெய்ஸ்வாலுக்கு அந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறி இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் போட்டியை இந்திய அணி பக்கமாக திருப்பினர். அது பற்றி ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் பேசினர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களும், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும் எடுத்தன. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது.
அப்போது பேட்டிங் செய்ய கடினமாக இருந்த போதும் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் அபாரமாக ஆடினர். ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கே எல் ராகுல் 77 ரன்களும் எடுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடியது இல்லை என்ற நிலையில் கே எல் ராகுல் அவருக்கு ஆலோசனைகள் அளித்து அவரை அமைதியாக்கி சிறப்பாக ஆட உதவினார்.
இதைப் பற்றி ஜெய்ஸ்வால் போட்டி முடிந்தவுடன் நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கே எல் ராகுல் தனக்கு உதவி செய்து, தன்னை அமைதிப்படுத்தி ரன் குவிக்க உதவி செய்து, வழி நடத்தினார் என்று கூறினார். அது பற்றி விளக்கம் அளித்த கே எல் ராகுல் தான் ஜெய்ஸ்வாலை பார்த்த போது தான் முதலில் ஆஸ்திரேலியா வந்தபோது எப்படி இருந்ததோ அதேபோல இருந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், தனக்கு அப்போது துவக்க வீரராக டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த முரளி விஜய் ஆஸ்திரேலிய மண்ணில் பேட்டிங் செய்வது பற்றி ஆலோசனைகள் அளித்து உதவியதாகவும், அதேபோல தானும் ஜெய்ஸ்வாலுக்கு உதவ வேண்டும் என நினைத்ததாகவும் கூறினார் கே எல் ராகுல். இந்த பதிவு ரசிகர்களை நெகழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.