பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள கே எல் ராகுல் பயிற்சிப் போட்டியில் காயம் அடைந்தார். அவருக்கு கடும் வலி ஏற்பட்டது. அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாததால் ஆடுகளத்தை விட்டு வேகமாக வெளியேறினார். இதை அடுத்து அவரால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 அன்று துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் பெர்த் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்து இந்திய வீரர்கள், தற்போது இரண்டு பிரிவுகளாக பிரிந்து பயிற்சிப் போட்டியில் ஆடி வருகின்றனர். இந்தப் பயிற்சி போட்டியில் கே எல் ராகுல், ஜெய்ஸ்வால் உடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்கினார். கேப்டன் மற்றும் துவக்க வீரர் ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படும் நிலையில் கே எல் ராகுல் மாற்று துவக்க வீரராக முதல் போட்டியில் விளையாட இருந்தார்.
அதற்காகவே பயிற்சிப் போட்டியில் துவக்க வீரராக பேட்டிங் இறங்கினார். அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவரது முழங்கையில் பந்து பட்டது. முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ராகுல் தொடர்ந்து பேட்டிங் செய்ய முயன்றார். ஆனால், வலி அதிகமாக இருந்ததால் அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
பிசியோதெரபிஸ்ட் அவருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டார். அவர் முதல் டெஸ்ட் போட்டிக்குள் தயாராகி விடுவாரா? அல்லது காயத்தால் விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போட்டியில் விராட் கோலி ஸ்லிப் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து இருந்தார்.
அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஆஉ இன்னிங்ஸ்களிலும் மோசமாக ஆட்டம் இழந்து இருந்தார். அந்த தொடரில் விராட் கோலி மொத்தமே 93 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இந்த நிலையில், பயிற்சிப் போட்டியிலும் அவர் மோசமாக ஆட்டம் இழந்து இருப்பது கவலையை அதிகரிக்க செய்து இருக்கிறது.