பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்து உள்ளனர். இதன் மூலம் 38 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் - சுனில் கவாஸ்கர் செய்த சாதனையை மீண்டும் நிகழ்த்தி உள்ளது இந்திய துவக்க ஜோடி.
பெர்த் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே எல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அவர்கள் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ள நிலையில் மேலும் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் ஜெய்ஸ்வால் - கே எல் ராகுல் துவக்க வீரர்களாக இறங்கி இருவரும் அரை சதம் அடித்து இருப்பதன் மூலம் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கின்றனர். 2000 ஆவது ஆண்டுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் 50 ஓவர்களுக்கும் அதிகமாக தாக்குப் பிடித்து நின்ற துவக்க ஜோடிகளில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஜோடி. 14 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் எதிரணியின் துவக்க வீரர்கள் 50 ஓவர்களுக்கும் அதிகமாக நின்ற நிகழ்வு நடைபெற்று இருக்கிறது.
2000 ஆவது ஆண்டுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் 50 ஓவர்களுக்கும் அதிகமாக தாக்குப் பிடித்து நின்ற துவக்க ஜோடி -
53.3 ஷெர்வின் கேம்ப்பெல் & வேவெல் ஹிண்ட்ஸ், சிட்னி - 2001
66.2 ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் & அலஸ்டர் குக், பிரிஸ்பேன் - 2010
51.1 ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் & அலஸ்டர் குக், மெல்போர்ன் - 2010
57.0* யஷஸ்வி ஜெய்ஸ்வால் & கே எல் ராகுல், பெர்த் - 2024
மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ஒரே இன்னிங்ஸில் 50 ரன்களுக்கும் அதிகமாக குவித்த நிகழ்வு நான்காவது முறையாக நடந்து இருக்கிறது. இதற்கு முன் சுனில் கவாஸ்கர் மற்றும் சேத்தன் சவுகான் ஒரு முறையும், சுனில் தவஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இரண்டு முறையும் இந்த சாதனையை செய்து இருக்கின்றனர். தற்போது நான்காவதாக ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் இந்த சாதனையை செய்து இருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே இன்னிங்ஸில் இரண்டு இந்திய துவக்க வீரர்கள் 50 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்த நிகழ்வு -
சுனில் கவாஸ்கர் (70) & சேத்தன் சவுகான் (85), மெல்போர்ன் - 1981
சுனில் கவாஸ்கர் (166*) & கிரிஸ் ஸ்ரீகாந்த் (51), அடிலெய்டு - 1985
சுனில் கவாஸ்கர் (172) & கிரிஸ் ஸ்ரீகாந்த் (116), சிட்னி - 1986
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (90*) & கேஎல் ராகுல் (62*), பெர்த் - 2024
பெர்த் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் அன்று ஜெய்ஸ்வால் - கே எல் ராகுல் ஆகிய இருவரும் மேலும் அதிக ரன் சேர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருவரும் சதம் அடிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.