பெர்த்: கடந்த 14 ஆண்டுகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் வெளிநாடுகளில் 100 ரன்களுக்கு மேல் 3 முறை பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள நிலையில், அந்த 3 முறையும் கேஎல் ராகுல் முக்கிய பங்காற்றி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 90 ரன்களிலும், கேஎல் ராகுல் 62 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

இந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் கேஎல் ராகுலின் ஆட்டம் அசத்தலாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலியா மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் வகையில் கேஎல் ராகுல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் கம்மின்ஸ், ஹேசல்வுட் மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகிய மூவரும் டிஃபென்ஸ் ஆடுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கேஎல் ராகுல் அமைந்தார். இதன்பின் அடுத்த 2 போட்டிகளிலும் கேஎல் ராகுல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயாராக விரைவாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் கேஎல் ராகுல்.
ஆனால் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வித்தியாசமான முறையில் கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, இனியும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று ரசிகர்கள் பேச தொடங்கினர். ஆனால் அந்த பேச்சுகளுக்கு பேட் மூலமாக கேஎல் ராகுல் மாஸ் பதிலடியை கொடுத்துள்ளார். இதனால் கேஎல் ராகுலை இனி தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரும் ஆஸ்திரேலியாவில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடந்த 14 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் மைதானங்களில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 3 முறை தான் 100+ பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
கடந்த முறை இங்கிலாந்துக்கு பயணித்த போது கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா கூட்டணி லார்ட்ஸ் மைதானத்தில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதேபோல் சென்சுரியன் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் - கேஎல் ராகுல் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இந்த 3 போட்டிகளிலும் கேஎல் ராகுல் பெயர் மட்டுமே மாறாமல் உள்ளது. இதன் மூலமாக வெளிநாடுகளில் கேஎல் ராகுல் மிகச்சிறந்த தொடக்க வீரர் என்பதை நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.