பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் தேவ்தத் படிக்கல்-க்கு பதிலாக சீனியர் வீரரான கேஎல் ராகுலை களமிறக்க வேண்டும் என்று புஜாரா அறிவுறுத்தியுள்ளார். இடது - வலது காம்பினேஷன் காரணமாக படிக்கலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று கூறிய அவர், நம்பர் 3ல் இருக்கும் அழுத்தத்தை சமாளிப்பது எளிதல்ல என்றும் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெர்த் மைதானத்தில் நாளை காலை விளையாடவுள்ளது. கடந்த முறை இந்திய அணிக்காக ஏராளமான காயங்களை சந்தித்து வெற்றிகளை பெற்று கொடுத்த புஜாரா, இம்முறை வர்ணனையாளராக செயல்படவுள்ளார். 2018-19 சீசனில் 1,200க்கும் அதிகமான பந்துகளையும், 2020-21 சீசனில் 928 பந்துகளையும் எதிர்கொண்டு அசத்தி இருந்தார்.

ஆஸ்திரேலியா மண்ணில் மட்டும் 11 போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா மொத்தமாக 993 ரன்களை விளாசி இருக்கிறார். இந்திய அணியில் புஜாரா இல்லையென்பதே ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுத்திருக்கிறது. இதனை வெளிப்படையாகவே பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட் போன்ற பவுலர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனால் புஜாராவின் இடத்தில் இந்திய அணியில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்வி இருந்து வந்தது. ஏனென்றால் சுப்மன் கில் காயமடைந்த சூழலில், திடீரென இந்திய அணி தேவ்தத் படிக்கலை நம்பர் 3ல் களமிறக்க போவதாக முடிவு செய்துள்ளது. இதுகுறித்து புஜாரா பேசுகையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி அமையும் என்று தெரியவில்லை.
ஆனால் சுப்மன் கில் இல்லையென்றால், நம்பர் 3 பேட்டிங் வரிசையில் கேஎல் ராகுலை களமிறக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நம்பர் 3ல் களமிறங்கும் அழுத்தத்தை சமாளிப்பதற்கு கேஎல் ராகுலிடம் அனுபவம் இருக்கிறது. ஆனால் இந்திய அணி நிர்வாகம் தேவ்தத் படிக்கலை நம்பர் 3ல் களமிறக்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் கேட்க முடிந்தது.
அதற்கு இடது - வலது பேட்டிங் காம்பினேஷன் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. என்னை பொறுத்தவரை கேஎல் ராகுல் போன்ற சீனியர் வீரரால் நம்பர் 3ல் களமிறங்கி சிறப்பாக சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய பேட்ஸ்மேன்களில் தேவ்தத் படிக்கல் தான் அதிக ரன்களை சேர்த்துள்ளார்.
ஏற்கனவே இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ள அவர், ஆஸ்திரேலியா பிட்சில் இருந்து வரும் பவுன்ஸை எப்படி சமாளிப்பார் என்பது ரசிகர்களிடையே விவாதமாக நடந்து வருகிறது. இதனால் அபிமன்யூ ஈஸ்வரனை தொடக்க வீரராக களமிறக்கி, நம்பர் 3ல் கேஎல் ராகுலை களமிறக்கலாம் என்றும் ரசிகர்கள் பேச தொடங்கியுள்ளனர்.