மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்க உள்ள கேஎல் ராகுல் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் கேஎல் ராகுல் தொடக்கம் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி அபார வெற்றியை பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணி தரப்பில் நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பார்டர் கவாஸ்கர் தொடருக்கு தயாராகும் வகையில் கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் இந்தியா ஏ அணிக்காக விளையாட அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் இந்தியா ஏ அணி சார்பாக நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தொடக்கம் கொடுக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதேபோல் இஷான் கிஷனுக்கு பதிலாக இந்தியா ஏ அணியின் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் செயல்பட உள்ளார். இந்திய அணிக்காக கடந்த சில தொடர்களில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தான் விளையாடி வந்தார். ஆனால் திடீரென மீண்டும் தொடக்க வீரராக களமிறக்கப்படுவது ஏன் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை.
இதனால் ரோஹித் சர்மாவின் இடத்தில் அபிமன்யூ ஈஸ்வரனை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. ஆனால் கேஎல் ராகுலுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய அனுபவம் உள்ளது. இதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதால், கேஎல் ராகுலையும் தொடக்க வீரராக களமிறக்க தயார் செய்வது வருவதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் நாளைய ஆட்டத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் - கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். அதேபோல் மிடில் ஆர்டரில் துருவ் ஜுரெலை களமிறக்குவதன் மூலமாக, அவருக்கும் ஆஸ்திரேலியா மண்ணில் பேட்டிங் அனுபவம் கிடைக்கும். இதனால் சர்ஃபராஸ் கான் சிறப்பாக செயல்படவில்லை என்றால், உடனடியாக துருவ் ஜுரெலை களமிறக்க முடியும்.
ஏனென்றால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரேயொரு சதம் மட்டுமே விளாசிய சர்ஃபராஸ் கான், அடுத்த 4 இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரெல் இருவரையும் மிடில் ஆர்டரில் களமிறக்கி இந்திய அணி ஆச்சரியம் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.