கோலி அவராகவே கேப்டன்சியை விட்டு விலக வேண்டும்.. அதிர வைத்த முன்னாள் கேப்டன்!
மும்பை : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் காயமடைந்த வீரர்களை வைத்துக் கொண்டு தொடரை வென்று கொடுத்த அஜின்க்யா ரஹானேவுக்கு, விராட் கோலி கேப்டன்சியை விட்டுக் கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.
தேர்வுக் குழு இந்த முடிவை எடுக்காது என்பதால் விராட் கோலி தாமாகவே டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.

டைகர் பட்டோடி போல..
ரஹானே குறித்து பாராட்டி பேசுகையில், பிஷன் சிங் பேடி, அவரை டைகர் பட்டோடியுடன் ஒப்பிட்டு பேசினார். சரியான வீரர்கள் அணியில் இல்லாத போதும் டைகர் பட்டோடி இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினார். அதே பாணியில் ரஹானேவும் காயமடைந்த வீரர்களை வைத்துக் கொண்டு வெற்றி பெற்றதாக குறிப்பிட்டார்.

முக்கிய பணி
மேலும், பந்துவீச்சாளர்களை கையாள்வது தான் ஒரு கேப்டனின் முக்கிய பணி. அந்த இடத்தில் தான் ரஹானே சிறப்பாக செயல்பட்டார். ரஹானேவின் ஒரு முடிவை கூட கேள்வி கேட்க முடியவில்லை. அந்த அளவு அவர் சிறப்பாக செயல்பட்டார் என்றார் பேடி.

அதிக திறமை
கேப்டன்சி என்பது 90 சதவீதம் அதிர்ஷ்டம், 10 சதவீதம் திறமை என ரிச்சி பெனாட் கூறுவார் ஆனால், ரஹானேவிடம் 50 சதவீதம் அதிர்ஷ்டம், 50 சதவீதம் திறமை உள்ளது என அவரது கேப்டன்சியை பாராட்டினார் பிஷன் சிங் பேடி.

கேப்டன்சி மாற்றம்
மேலும், கோலி சிறந்த பேட்ஸ்மேனாக அணியில் நீடித்து, கேப்டன்சியை ரஹானேவுக்கு அளிக்க வேண்டும். இதை எந்த தேர்வுக் குழுவினரும் செய்ய மாட்டார்கள் என எனக்கு நிச்சயம் தெரியும். கோலியே முன்வந்து கேப்டன்சியை ரஹானேவுக்கு அளிக்க வேண்டும் என்றார் பேடி.


Click it and Unblock the Notifications