மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் டிராவிஸ் ஹெட்டுக்கும் சிராஜுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இருவர் மீதும் தவறு இருப்பதாக கூறி ஐசிசி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதித்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், சிராஜ் செய்ததை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதில் டிராவிஸ் ஹெட் அடிலெய்ட் டெஸ்டில் இரக்கமே இல்லாமல் உங்களுடைய பவுலிங்கை அடித்து நொறுக்கி இருக்கிறார்.

உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? கொஞ்சமாவது மூளை இருக்கிறதா? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? மைதானத்தில் அனைத்து பக்கத்திலும் உங்கள் பந்தை அவர் அடித்து நொறுக்கி இருக்கிறார். கொஞ்சம் கூட நெருக்கடி இல்லாமல் பவுண்டரி சிக்ஸர்களாக விளாசி 140 ரன்கள் குவித்து இருக்கிறார்.
அப்படிப்பட்ட வீரரை நீங்கள் அநாகரிகமாக வழி அனுப்பலாமா? இது எல்லாம் ஸ்லஜிங் கிடையாது. இது பைத்தியக்காரத்தனம்! ஒரு வீரர் 140 ரன்கள் அடித்து விட்டால் அவருக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். அவருடைய ஆட்டத்தை கைதட்டி பாராட்ட வேண்டும். அவரை பாராட்டாமல் இப்படி வம்பு இழுத்து வழி அனுப்பி வைக்கலாமா? ஒருவேளை நீங்கள் அவரை 10 ரன்கள் ஆக்கியிருந்தால் உங்களுடைய திட்ட படி அவருடைய விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் நீங்கள் செய்ததில் ஏதேனும் நியாயம் இருந்திருக்கலாம்.
ஆனால் உங்கள் ஓவர் முழுவதும் அவர் அடித்திருக்கிறார். ஹெட்டின் ஆட்டத்திற்கு நமது பவுலர்களால் பதிலே சொல்ல முடியாது. 141 பந்துகளில் 140 ரன்கள் என்பதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. குறிப்பாக அஸ்வினை எல்லாம் அவர் சுழற் பந்துவீச்சாளராக கூட மதிக்கவில்லை. அஸ்வின் பந்துவீச்சில் இறங்கி வந்து அவரை அடித்து நொறுக்கி இருக்கிறார் என்று ஸ்ரீகாந்த் சிராஜை கடுமையாக சாடி இருக்கிறார்.