மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஹர்சித் ராணா அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் குல்தீப் யாதவ் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டு மைதானத்தில் நடக்கவுள்ளது.

இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஏனென்றால் ஆசியக் கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பாக குல்தீப் யாதவ் பவுலிங் செய்திருந்தார். ஆனாலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவரது இடத்தில் ஹர்சித் ராணா களமிறக்கப்பட்டிருந்தார். அதேபோல் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் நோக்கில் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஹர்சித் ராணாவோ, அக்சர் படேலோ எதிர்பார்த்த அளவிற்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் அடிலெய்டு ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்குவது பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குல்தீப் யாதவ் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாதது தொடர்பாக பேட்டிங் பயிற்சியாளர் சுதான்ஷு கோடக் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்போதும் பிட்சை பொறுத்தே தேர்வு செய்யப்படும். நம்பர் 8ல் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் தேவையா அல்லது பவுலர் தேவையா என்பதை பிட்சை பார்த்து முடிவு எடுப்போம். இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர் இணைந்து பிளேயிங் லெவனை தீர்மானிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதனால் 2வது ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அல்லது ஹர்சித் ராணா ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட்டு, குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிலெய்டு மைதானத்தில் 3 வேகப்பந்துவீச்சாளர்களின் தேவையும் இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.