ஆறுதல் வெற்றி
கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, நான்கு பேருக்கு அணியில் வாய்ப்பு அளித்தது. முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய நான்கு வீரர்கள் அவர்களுக்கு வழிவிடும் வகையில் நீக்கப்பட்டனர்.
மாற்றம்
நவ்தீப் சைனி, முகமது ஷமி, சாஹல், மயங்க் அகர்வால் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், ஷுப்மன் கில் அணியில் வாய்ப்பு பெற்றனர். இதில் சாஹல் முதல் இரண்டு போட்டிகளில் ரன்களை வாரி இறைத்ததால் நீக்கப்பட்டு இருந்தார்.
பார்மில் இல்லை
அவருக்கு பதில் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் நிலையான பார்மில் இல்லை. இந்த நிலையில், அவருக்கு இது முக்கிய வாய்ப்பாக அமைந்தது. இந்தப் போட்டியில் நிரூபித்தால் அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பந்துவீச்சு
இந்த நிலையில், அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். 10 ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஜடேஜா 10 ஓவர்களில் 62 ரன்கள் கொடுத்த நிலையில் அவரை விட குறைவாகவே ரன்கள் விட்டுக் கொடுத்தார் குல்தீப்.
வாரி இறைத்த சாஹல்
முதல் இரண்டு போட்டிகளில் சாஹல் 89 மற்றும் 71 ரன்கள் வாரி இறைத்து இருந்தார். அவர் மீது கேப்டன் கோலி அதிருப்தியில் இருக்கிறார். இந்த நிலையில், அவரது இடத்தை சரியாக பிடித்துள்ளார் சக சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்.
வாய்ப்பு கிடைக்கும்
அடுத்து நடக்க உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சாஹலை விட குல்தீப் யாதவ்வுக்கு தான் அணியில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு குல்தீப் யாதவ் டி20 போட்டிகளில் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்தார்.
அரிய வாய்ப்பு
அந்த இடத்தை குல்தீப் யாதவ் மீண்டும் பிடிக்க அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கும்.