மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய போதும் முகமது ஷமி, ரவீந்திரா ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் தொடருக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியே அதிகளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரும் கம்பேக் கொடுப்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடிய 5 வீரர்களுக்கு, இந்த இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதில் 2 வீரர்கள் காயம் காரணமாக ஓய்வில் இருக்கின்றனர்.
ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா மற்றும் தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரும் நீக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது முறையாக கூறப்படவில்லை. முகமது சிராஜ் சிறந்த ஃபார்மில் இருப்பதால், அவர் கம்பேக் கொடுத்துள்ளார்.
இதனால் ஷமி நீக்கப்பட்டிருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகிய 3 ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டிருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜடேஜா இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான திட்டத்தில் இருப்பதாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.