மும்பை : நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் கடந்த நான்கு வருடத்திற்கு முன் செய்த ஒரு சம்பவத்துக்காக இப்போதும் இந்திய ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார்.
2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்த தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் அரை இறுதியில் மோதின. அப்போது இந்திய அணி சேஸிங்கில் கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்து போராடிய நிலையில் தோனி களத்தில் இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால், மார்டின் கப்தில் தோனியை ரன் அவுட் செய்தார். இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அப்போது மார்டின் கப்தில் மீது இந்திய ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். சமூக வலைதளங்களில் அவரை வசை பாடினர்.

தோனி கடைசியாக ஆடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி அதுதான். அத்துடன் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில், தோனி குறித்து நினைவு வரும் போதும், ஒவ்வொரு ஆண்டும் அந்த அரை இறுதிப் போட்டி நடந்த நாள் அன்றும், இந்தியா அதே போல அரை இறுதி, இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் போதும் இந்திய ரசிகர்கள் தோனி ரன் அவுட் சம்பவத்தை நினைவு கூர்வது வழக்கம்.
சமூக ஊடகங்களில் அந்த ரன் அவுட் புகைப்படம் அப்போதெல்லாம் அதிகம் பகிரப்படும். அத்துடன் ரசிகர்கள் நிறுத்துவதில்லை. மார்டின் கப்தில் ஈமெயில் முகவரியை கண்டுபிடித்து அவரை திட்டி மெயில் அனுப்பி வருகிறார்கள். அதை நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார்கள்.
மார்டின் கப்தில் இப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதில்லை. அவரும் ஓய்வு பெற்று விட்டார். ஆனாலும், ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. நியூசிலாந்து அணி தோனியை ரன் அவுட் செய்து 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும் உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.