
ஜடேஜாவின் செயல்
இந்நிலையில் இந்த போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா செய்த ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆஸ்திரேலியா 120 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த போது ஜடேஜா பந்துவீச வந்தார். அப்போது பந்து வீசும் முன் திடீரென முகமது சிராஜிடம் சென்ற ஜடேஜா, அவரின் கைகளில் இருந்து ஏதோ ஒரு திரவியத்தை எடுத்து தனது விரல்களில் பூசிக்கொண்டார்.

குற்றச்சாட்டுக்கள்
இடதுகை பவுலரான ஜடேஜா எந்தெந்த விரல்களில் பந்தை டேர்ன் செய்கிறாரோ அங்கு மட்டும் அதனை தடவிக்கொண்டார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி பந்தை சேதப்படுத்தினாரா என்ற கோணத்தில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். முன்னாள் வீரர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

நடுவர் விசாரணை
இதனையடுத்து இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. அதாவது முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர் ஜடேஜா மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை போட்டி நடுவர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். வீடியோவும் பார்க்கப்பட்டுள்ளது. அப்போது ஜடேஜா கையில் தடவியது ஒரு வகையான வலி நிவாரண மருந்து தான் என்றும், விதிகளை எதுவும் மீறவில்லை என்றும் இந்திய அணி தரப்பில் கூறப்பட்டது.

என்ன நடவடிக்கை
இதனால் ஜடேஜா மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கமாக பந்துகள் கைகளில் இருந்து வழுக்கி கொண்டு செல்லாமல் இருக்க, கிரிப்பிற்காக திரவியங்களை பயன்படுத்துவார்கள். இது விதிகளுக்கு உட்பட்ட ஒன்று தான். ஒருவேளை ஜடேஜா அதுபோன்று கிரிப்பிற்காக செய்திருந்தாலும், எந்த தவறும் இல்லை என வல்லுநர்கள் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளனர்.

மைக்கேல் வாகன் ட்வீட்
இது குறித்து ட்வீட் போட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஜடேஜா தனது விரலில் என்ன பூசிக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு இதுபோன்று பார்த்ததே கிடையாது என பதிவிட்டுள்ளார். இதனால் புதிய விஷயத்தை எதையோ ஜடேஜா பயன்படுத்துகிறாரா?, அவர் செய்தது சரிதானா என்ற கோணத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











