சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மறுத்து, விடுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார். இது பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்.
ரோஹித் சர்மாவுக்கு இரண்டாவது குழந்தை சமீபத்தில் பிறந்தது. அதற்காகவே அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகி இருந்தார். குழந்தையின் பிறப்பு எப்போது என்பது தெரியாததால் ஒரு மாதம் முன்பு அந்த முடிவை எடுத்து இருந்தார். ஆனால், தற்போது குழந்தை பிறந்து விட்ட நிலையில் அவர் முதல் போட்டியில் ஆட வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலியும் இந்த கருத்தை முன் வைத்து இருந்தார். ஏனெனில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் முதல் போட்டியில் இருந்து கடைசி போட்டி வரை ஒரே நபரே கேப்டனாக இருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. ஆனாலும், ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் இருந்து விளையாட முடிவு செய்து இருக்கிறார்.
இது பற்றி பேசிய மைக்கேல் கிளார்க், "எனது வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றால் எனது மகள் பிறந்த தினம் தான். அது எந்த ஒரு டெஸ்ட் போட்டியை விடவும், எந்த ஒரு வெற்றியை விடவும், உலகக்கோப்பையை விடவும் மிகவும் பெரியது. அதனுடன் எதனையும் ஒப்பிட முடியாது." என்றார்.
மேலும், "குடும்பம் தான் முதலில். டெஸ்ட் போட்டி என்பது அதன் பின்பு தான். ஆனால், இது மிகவும் கடினமான தருணம். ரோஹித் சர்மாவை இந்திய அணி நிச்சயம் இழந்ததாகவே உணரும். அவரது தலைமை பண்பு இல்லாததை இந்திய அணி உணரும். ஆனால், ரோஹித் சர்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் நானும் இதையேதான் செய்திருப்பேன்." என்றார் மைக்கேல் கிளார்க்.