ஜடேஜா செய்தியாளர் சந்திப்பு விவகாரத்தில் இந்திய அணி பொய் பேசிவிட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். மெல்போர்னில் நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன் ரவீந்திர ஜடேஜா நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எழுந்த சர்ச்சை குறித்து வாஹன், Podcast ஒன்றில் கருத்து தெரிவித்தார். ஜடேஜா கேள்விகளுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளித்ததால் ஆஸ்திரேலிய ஊடகங்கள் அதிருப்தி அடைந்தது. ஜடேஜாவின் பதில்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வாகன் தெரிவித்தார்.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி பயிற்சி செய்து வந்தது. அப்போது தான் ஜடேஜாவுக்கு இந்தி மொழியில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவரும் இந்தியில் பதில் அளித்தார். அப்போது தான் ஜடேஜா விரைவில் வெளியேற வேண்டியிருப்பதால் ஆங்கிலத்தில் பதில் அளிக்க முடியாது என்று பிசிசிஐ ஊடக குழு தெரிவித்தபோது ஆஸ்திரேலிய நிருபர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து பேசிய வாஹன், மொழி வேறுபாட்டை போக்க AI மொழிபெயர்ப்பு கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஜடேஜாவின் பதில்களை ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் மாற்றும் திறன் AI களுக்கு இருப்பதாகவும், இதன் மூலம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் ஜடேஜாவின் பதில்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதே போன்று விமான நிலையங்களில் இந்திய வீரர்களின் குடும்பங்களை படம்பிடித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் எல்லை மீறியதாக வாகன் விமர்சனம் செய்தார். இந்தியாவின் கிரிக்கெட் சக்தி குறித்தும், தனியுரிமை மீறல்களுக்கு அவர்கள் எதிர்வினை காட்டும் விதம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடு," என்று வாகன் கூறினார். "விமான நிலையத்தில் கேமராக்கள் இருப்பதும் குடும்பங்களை படம்பிடிப்பதும் மிகவும் மோசமானது என்றும் அவர் கூறினார்.
மேலும் கேள்விகளைத் தவிர்க்க பேருந்தை மிஸ் செய்து விடுவோம் என இந்திய அணி மேலாளர் சாக்குப்போக்கு கூறியதாக குறிப்பிட்ட வாஹன், இந்திய அணி பேருந்துகளில் பயணிக்காது, விலை உயர்ந்த கார்களில் பயணிக்கிறது என்று நகைச்சுவை செய்தார். இந்த விவகாரத்தில் இந்தியா பொய் சொல்லிவிட்டதாகவும் வாஹன் கூறினார். முகமது சிராஜ், டிராவிஸ் ஹெட் மீது கோபம் வெளிப்படுத்தியது மற்றும் ஜடேஜாவின் பத்திரிகையாளர் சந்திப்பு போன்ற நிகழ்வுகள் எல்லாம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் தீவிரத்தை எகிற வைத்திருப்பதாக அவர் பாராட்டினார். கிரிக்கெட் தொடர்களில் சில டிராமாவைப் பார்ப்பது தனக்கு பிடிக்கும் என்றும் வாஹன் கூறினார்.