மெல்போர்ன் : இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் இரட்டை சதம் அடிப்பார் என மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தொடரில் ஸ்மித் முதல் டெஸ்டில் 0, 17 ஆகிய ரன்களை அடித்திருந்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு ரன்கள் மட்டுமே அடித்து இருந்த ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். ஸ்மித் ஐந்து இன்னிங்சில் இந்த தொடரில் 124 ரன்கள் அடித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க், இந்த டெஸ்ட் போட்டியில் ஸ்மித் இரட்டை சதம் அடிப்பார் என நினைக்கின்றேன்.
ஆஸ்திரேலியா அணிக்காக ஸ்மித் தான் அதிக ரன்களை இந்த போட்டியில் அடிப்பார். இதை போல் ரோகித் சர்மாவும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் ரோகித் சர்மாவுக்கு மிகவும் பிடித்ததாகும். அவருடைய விளையாட்டுக்கு இந்த மைதானம் ஏற்ற வகையில் இருக்கும்.
பும்ரா மிகவும் அபாயகரமான வீரராக இருக்கின்றார். அவர் வீசும் அனைத்து பந்துகளிலும் விக்கெட் கிடைக்கும் என தெரிகிறது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணியில் லயான், இந்த டெஸ்ட் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றேன் என மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன்களை அடித்து வரும் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக திட்டங்களை தீட்டி இருப்பதாகவும் அவருடைய விக்கெட்டை வீழ்த்துவோம் என்று ஆகாஷ் தீப் பேசி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மைக்கேல் கிளார்க், இந்திய வீரர்கள் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக மைண்ட் கேம் விளையாடுவதாகவும், ஹெட்டின் கவனத்தை சிதறடிக்க இது போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
எனினும் அறிவுபூர்வமான கிரிக்கெட்டை டிராவிஸ் ஹெட் விளையாடுவதால் அவர் தொடர்ந்து நம்பிக்கையுடன் பேட்டிங் செய்து ரன்களை குவிப்பார் என்றும் இந்திய வீரர்கள் ஹெட்டுக்கு பந்தை பவுண்டரிக்கு சேஸ் செய்வதை நிறுத்திவிட்டு அவரை ஆட்டம் இழக்க முயற்சி செய்யட்டும் என்றும் கிளார்க் கூறி இருக்கிறார். 40, 50 ரன்களை ஹெட் தாண்டிவிட்டால் அவர் அதை சதமாக மாற்றுவது எப்படி என்று நன்றாக தெரியும் என கிளார்க் கூறியிருக்கிறார்.