மும்பை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தி இருக்கிறார்.
முந்தைய காலத்தில் எல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்றால் முடிவுகள் கிடைக்க ஐந்து நாட்கள் போதாது. பெரும்பான்மையான போட்டிகள் சமநிலை முடிவடையும். ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் மூன்று அல்லது நான்கு நாட்களில் எல்லாம் முடிவடைந்து விடுகிறது.

இந்தியா அண்மையில் விளையாடிய போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டி கூட ஐந்து நாட்கள் முழுமையாக நடைபெறுவதில்லை. ஏதேனும் வானிலை குறிக்கீடு ஏற்பட்டு இருந்தால் மட்டுமே போட்டி ஐந்தாவது நாளுக்கு செல்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வாகன், டெஸ்ட் கிரிக்கெட்டை நாம் ஐந்து நாட்களில் இருந்து நான்கு நாட்களாக குறைக்க வேண்டும்.
தற்போது வீரர்கள் ரசிகர்களை பொழுதுபோக்கும் வகையில் விளையாடி வருகிறார்கள். இதனால் வியாழக்கிழமை தொடங்கும் டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் படி நடத்த வேண்டும். இதன் மூலம் அட்டவணையை சரியாக நம்மால் தயார்படுத்த முடியும். முந்தைய காலத்தில் வீரர்கள் பொறுமையாக விளையாடுவார்கள்.
ஆனால் தற்போது அனைத்து வீரர்களுமே அதிரடியை காட்டுகிறார்கள். இதனால் போட்டி முன்பே முடிவடைந்து விடுகிறது. போட்டியை விரைவாக முடிக்க வேண்டும். விரைவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒவ்வொரு அணியும் விளையாடி வருகிறது. எனவே உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் நிர்வாகிகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 5 நாளிலிருந்து நான்கு நாட்களாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு எதிராக நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடியது இதில் போட்டி மூன்றாவது நாள் மாலையை முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டி என்ற ஒரு விஷயம் ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவு நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்த மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.