பிரிஸ்பேன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி மழை காரணமாக வெறும் 4.5 ஓவர்கள்தான் வீசப்பட்டது. இந்திய அணி 52 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
இதன் மூலம் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரண்டு ஆட்டம் மழையால் ரத்தானது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், ஒரு தொடரில் இவ்வளவு மழை பெய்து கடைசியாக போட்டிகள் தடைப்பட்டது எப்போது என்பது எனக்கு ஞாபகமே இல்லை.

ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல தொடர் தான். முக்கியமான ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதற்காக நான் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய நல்ல விஷயங்களையும் பாசிட்டிவான விஷயங்களையும் எடுத்துக் கொள்கின்றோம்.
களத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு நாங்கள் சிறப்பான அணியை தேர்வு செய்து வருகின்றோம். அணியில் வந்த இளம் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய பணி என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட்டுள்ளனர். இதைத்தான் நாங்கள் அவர்களிடம் இருந்து எதிர்பார்த்தோம்.
தற்போது ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வேறு நடைபெற உள்ளது. அதையும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் அணி முழுமை அடைந்திருக்கின்றது. அனைவரும் செட்டில் ஆகிவிட்டனர். இதற்கு இடையே பிக் பேஷ் லீக் தொடர் நடைபெற இருக்கிறது. அதிலும் எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று மிட்செல் மார்ஷ் தெரிவித்தார்.
இறுதியாக டி20 உலக கோப்பைக்கு யார் கேப்டனாக செயல்படுவார்? நீங்களா இல்லை பாட் கம்மின்ஸா என்று நெறியாளர் கேள்வி கேட்டார். அதற்கு நான்தான் கேப்டனாக இருப்பேன் என்று அவர் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். இதன் மூலம் பாட் கம்மின்ஸ், டி20 கேப்டனாக இனி செயல்பட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது.