பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான முகமது சிராஜ் காயம் காரணமாக வலியில் துடித்து, பாதியில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதை அடுத்து ரசிகர்கள் உறைந்து போனார்கள்.
முகமது சிராஜ் 38வது ஓவரின் போது பாதியில் விலகியதால் ஆகாஷ் தீப் அந்த ஓவரை முழுமையாக வீசினார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் காபா மைதானத்தில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழையின் காரணமாக 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் திட்டமிட்டபடி துவங்கியது.
பும்ரா முதல் 2 விக்கெட்களை வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தினார். இடையே முகமது சிராஜ்-க்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அவர் கடந்த போட்டியில் ட்ராவிஸ் ஹெட் உடன் மோதலில் ஈடுபட்டதால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவர் பந்து வீசிய போதெல்லாம் கோஷம் எழுப்பி வந்தனர்.
37வது ஓவரை அவர் வீசிய போது காலில் வலி இருப்பதை உணர்ந்தார். இரண்டாவது பந்தை வீசி முடித்த பின் அவரது இடது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அவர் இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட்டை வருமாறு சைகை செய்தார். அதன் பின்னரும் வலி குறையாததை அடுத்து அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
இது விரைவில் சரியாகும் பிரச்சனையாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. முகமது சிராஜ் சுமார் 20 நிமிடங்களுக்கு பின் மீண்டும் களத்துக்கு வந்தார். அதன் பின்னரே ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஏனெனில், இந்திய அணியில் பும்ரா மட்டுமே அனுபவ வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். ஆகாஷ் தீப் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே பந்து வீசிய அனுபவம் கொண்டவர்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆகாஷ் தீப் பங்கேற்கவில்லை. நான்காவது பந்துவீச்சாளராக இருக்கும் நிதிஷ் குமாருக்கும் இதுவே முதல் டெஸ்ட் தொடர். மாற்று வேகப் பந்துவீச்சாளரான ஹர்ஷித் ராணா இந்த தொடரில் அறிமுகமாகி முதல் இரண்டு போட்டிகளில் ஆடினார். ஆனால், அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.