அடிலெய்டு: ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருக்கும் நிலையில் முகமது ஷமி மட்டும் தான் இந்திய அணியை காப்பாற்ற முடியும் என சமூக வலைதளங்களிலும், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி போன்றவர்களும் சொல்லி வருகின்றனர்.
ஆனால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவது சந்தேகம்தான் என தெரிய வந்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியின் முடிவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது முகமது ஷமி என்ன நிலையில் இருக்கிறார்? என கூறினார். அதன் மூலம், இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கு பின் தனது காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்தார் முகமது ஷமி. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அதில் இருந்து மீண்டு வந்தார். சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். சமீபத்தில் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் அவர் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.
ஆனால், அவருக்கு மீண்டும் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. முகமது ஷமியை கண்காணிக்க பிசிசிஐ மூவர் குழுவை நியமித்து உள்ளது. இந்த நிலையில், அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விரைவில் இணைவார் என செய்திகள் வெளியாகி இருந்தன. அது பற்றி பேசிய ரோஹித் சர்மா, "முகமது ஷமி எப்போது வேண்டுமானாலும் இந்திய அணியுடன் இணையலாம். அவருக்காக அணியின் கதவுகள் திறந்து இருக்கின்றன. ஆனால், அவர் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடிய போது காலில் வீக்கம் ஏற்பட்டு உள்ளது." என்றார்,
மேலும், "ஷமியை பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பிசிசிஐ வல்லுனர்கள் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பது பற்றிய முடிவை எடுப்பார்கள்." என்றார் ரோஹித் சர்மா. இதன் மூலம், முகமது ஷமி இந்திய அணியை மீட்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெற்றிகளை பெற உதவுவார் என்ற ரசிகர்களின் ஆசை நிறைவேறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய இந்திய பந்துவீச்சாளர்களில் பும்ரா மட்டுமே ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தும் பந்து வீச்சாளராக இருக்கிறார். முகமது ஷமி இந்திய அணியுடன் இணையவில்லை என்றால் இந்திய அணியின் பவுலிங் நிலை கவலைக்குரிய ஒன்றாகவே இருக்கும்.