பிரிஸ்பேன்: முகமது ஷமி தாமாகவே டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்ற முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இந்திய டெஸ்ட் அணியில் இணைந்து அணியை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் டெஸ்ட் போட்டிகளை புறக்கணித்து விட்டு, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2025 ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் மட்டுமே அனுபவ பந்துவீச்சாளர்களாக இடம் பெற்று உள்ளனர். மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக ஹர்ஷித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் இதுவரை பயன்படுத்தப்பட்டு உள்ளனர். எனினும், வேகப் பந்து வீச்சில் இந்திய அணி பின்னடைவையே சந்தித்து இருக்கிறது.

இந்த நிலையில் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஆன முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டு விட்ட நிலையில், விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவருக்கு அடிக்கடி முழங்காலில் வீக்கம் ஏற்படுவதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறி இருந்தார். இதற்கிடையே முகமது ஷமி, இந்தியாவில் நடைபெற்று வந்த ரஞ்சி ட்ராபி டெஸ்ட் தொடரிலும், சையது முஷ்டாக் அலி டி20 தொடரிலும் பங்கேற்று சிறப்பாக பந்து வீசி இருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகமது ஷமி அதிர்ச்சி முடிவை எடுத்து இருக்கிறார். அதன்படி ஷமி இனி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் அடுத்து நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2025 ஐபிஎல் தொடரில் அவர் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏன் டெஸ்ட் போட்டிகளை தவிர்க்கிறார் முகமது ஷமி? 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் போது முகமது ஷமிக்கு காலில் ஒரு பிரச்சனை இருந்தது. அவர் நீண்ட நேரம் களத்தில் இருந்தாலோ, தொடர்ந்து பந்து வீசினாலோ அவரது முழங்காலில் வீக்கம் ஏற்பட்டு வந்தது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதிலிருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்த பிரச்சனை அவருக்கு இன்னும் முழுமையாக குணமாகவில்லை என தெரிய வந்துள்ளது.
அதனால், குறைந்த ஓவர் போட்டிகளில் மட்டும் பங்கேற்க ஷமி முடிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் நாள் முழுவதும் களத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அப்போது அவரது முழங்காலில் உள்ள பிரச்சனை மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சத்தால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், தான் உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்ற அவர், அடுத்து உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடரான விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்க உள்ளார். விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் மாநில அணியிலும் முகமது ஷமியின் பெயர் இடம் பெற்று இருக்கிறது.