மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ரஞ்சி டிராபி போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அசத்தலாக செயல்பட்டிருக்கிறார். இதனால் முகமது ஷமி இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவில் இணைவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி, முதல்முறையாக ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் களமிறங்கி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக முகமது ஷமி தீவிரமாக தயாராகி வந்தார். ஆனால் 18 பேர் கொண்ட இந்திய அணியில் முகமது ஷமியின் பெயர் இடம்பெறவில்லை.

பெங்களூரில் முகமது ஷமியின் பவுலிங்கை சோதனை செய்த துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், இன்னும் முழு ஃபிட்னஸ் மற்றும் ஃபார்முக்கு திரும்பவில்லை என்று கருதியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முகமது ஷமி ரஞ்சி டிராபி தொடரில் விளையாட பிசிசிஐ தேர்வுக் குழுவினரால் அறிவுறுத்தப்பட்டார். இதன் காரணமாக மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணிக்காக களமிறங்கினார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 19 ஓவர்களை வீசிய முகமது ஷமி 4 மெய்டன் ஓவர்கள் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் ஒரு ஸ்பெல்லில் 6 ஓவர்களையும், மற்றொரு ஸ்பெல்லில் 5 ஓவர்களையும் எளிதாக வீசி இருக்கிறார். பின்னர் பேட்டிங்கில் 36 பந்துகளைல் எதிர்கொண்டு 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 37 ரன்களை எடுத்திருக்கிறார்.
இதனால் முகமது ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துவிட்டதா என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து முகமது ஷமியின் பயிற்சியாளர் பத்ருதீன் பேசுகையில், தற்போதைய சூழலில் முகமது ஷமி முழு ஃபிட்னஸை எட்டிவிட்டார். 100 சதவிகிதம் ஃபிட்னஸை எட்டிய பின்னரே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பேன் என்பதில் தீவிரமாக இருந்தார்.
அதேபோல் முகமது ஷமி ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியுடன் இணைவார். கம்பேக் கொடுத்து ஃபிட்னஸை நிரூபித்துள்ளதோடு, விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் 2ஆம் பாதியில் முகமது ஷமி முக்கியமான வீரராக இருப்பார்.
அதேபோல் முகமது ஷமி அடுத்ததாக சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாட விரும்பி இருக்கிறார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் என்ன சொல்கிறது என்பதை பொறுத்தே அவர் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். முகமது ஷமியை போன்ற பவுலர்கள் எவ்வளவு அதிகமாக பவுலிங் செய்கிறார்களோ, அவ்வளவு சிறப்பாக அவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.