சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் அபாயகரமான வீரரான டிராவிஸ் ஹெட் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் 8வது முறையாக வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் மூலமாக இந்திய அணி தொடர்ந்து 18வது முறையாக டாஸில் தோல்வி அடைந்து புதிய வரலாறு படைத்திருக்கிறது.

2,62,144 முறையில் ஒரேயொரு முறை மட்டுமே இப்படி 18 முறை டாஸை இழப்பது நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டு, அர்ஷ்தீப் மற்றும் நிதீஷ் குமார் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹெட் - மிட்சல் மார்ஷ் இருவரும் தொடக்கம் கொடுத்தனர்.
முகமது சிராஜ் முதல் ஓவரை மெய்டனாக வீசினாலும், அடுத்தடுத்து டிராவிஸ் ஹெட் பவுண்டரியாக விளாசி தள்ளினார். இதனிடையே மிட்சல் மார்ஷ் சிக்ஸ், பவுண்டரி அடித்து அதிரடியில் பட்டையை கிளப்ப, ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 9 ஓவர்களிலேயே 57 ரன்களாக உயர்ந்தது. இந்த நிலையில் பவர் பிளேவின் கடைசி ஓவரில் கட்டாயமாக விக்கெட் வீழ்த்த வேண்டிய தேவையுடன் சிராஜ் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் 2வது பந்தில் சிராஜ் பேக் ஆஃப் தி லெந்தில் வீச, அதாஇ ஹெட் லேட் கட் ஷாட்டாக ஆடினார். அது நேராக பிரசித் கிருஷ்ணாவின் கைகளில் சென்று விழுந்தது. இதனால் அபாயகரமான வீரரான டிராவிட் ஹெட் 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்துவது 8வது முறையாகும்.
டி20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டி என்று டிராவிஸ் ஹெட் மற்றும் முகமது சிராஜ் இருவரும் நேருக்கு நேராக 18 முறை விளையாடி இருக்கின்றனர். அதில் முகமது சிராஜ் 8 முறை ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். பெரும்பாலும் பும்ரா இல்லாத நேரங்களில் ஹெட்டின் விக்கெட்டை சிராஜ் துல்லியமாக பவுலிங் செய்து வீழ்த்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.