அடிலெய்டு: ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட், முகமது சிராஜ் தன்னை திட்டியதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். அது குறித்து முகமது சிராஜ் சில உண்மைகளை போட்டு உடைத்து இருக்கிறார். உண்மையில் ட்ராவிஸ் ஹெட் தான் இந்த விவகாரத்தை ஆரம்பித்ததாகவும், அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொய் சொல்லி இருப்பதாகவும் முகமது சிராஜ் வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்தார்.

அவர் 140 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் வந்து வீச்சில் பவுல்டு அவுட் ஆனார். அவர் ஆட்டம் இழந்து வெளியேறி சென்ற போது முகமது சிராஜ் அவரைப் பார்த்து ஏதோ பேசினார். இது பற்றி ட்ராவிஸ் ஹெட் இரண்டாம் நாள் முடிவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருந்தார். அப்போது முகமது சிராஜிடம் நன்றாக பந்து வீசினாய் என சொன்னதாகவும், அதற்கு முகமது சிராஜ் மிகவும் மோசமான வார்த்தைகளால் தன்னை தாக்கி பேசியதாகவும் கூறி இருந்தார்.
இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முகமது சிராஜ் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஹர்பஜன் சிங்-இடம் பேசினார். சிராஜ் பேசியது இங்கே - "ட்ராவிஸ் ஹெட் உடன் நல்ல போட்டி இருந்தது. அவருக்கு பந்து வீசியதை நான் மிகவும் விரும்பினேன். அவர் மிக சிறப்பாக விளையாடி 140 ரன்கள் எடுத்தார். நான் வீசும் நல்ல பந்தில் ஒருவர் சிக்ஸ் அடித்தால் அது நமக்கு கடுப்பாக இருக்கும். நமது கிரிக்கெட் ஆர்வத்தை அது தூண்டிவிடும்."
"நான் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியவுடன் அதை கொண்டாடினேன். ஆனால், அவர் என்னை திட்டினார். "நன்றாக வந்து வீசினாய்" என என்னிடம் சொன்னதாக அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். அது பொய். அவர் என்னிடம் என்ன சொன்னார்? என்று நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கலாம். நான் விக்கெட்டை கொண்டாடிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால், அவர்தான் என்னிடம் வந்து பேசினார்."
"ஆனால், பத்திரிக்கையாளர் சந்திப்பில், "நன்றாக வந்து வீசினாய்" என் என்னிடம் சொன்னதாக பொய் கூறி இருக்கிறார். நீங்கள் அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பார்க்கலாம். நான் யாரிடமும் அவமரியாதையாக நடந்து கொள்ளவில்லை. நான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் மதிக்கிறேன். கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு. ஆனால், அவர் நடந்து கொண்ட விதம் அப்படி இல்லை." என்றார் முகமது சிராஜ்.
அப்போது அருகே இருந்த ஹர்பஜன் சிங், "நீ செய்தது சரிதான். ட்ராவிஸ் ஹெட், "நன்றாக வந்து வீசினாய்" என சொல்லவில்லை. ஆஸ்திரேலியர்கள் எப்போதும் அதை சொல்ல மாட்டார்கள். அவர்களுடன் எனக்கு நிறைய பழைய சம்பவங்கள் உள்ளன." என்றார். முகமது சிராஜின் இந்த பேச்சால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது. ட்ராவிஸ் ஹெட் அப்படி என்ன சொன்னார்? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.