மும்பை: இந்திய அணியில் பிளேயிங் லெவனில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. t20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரரான அர்ஸ்தீப் முதல் இரண்டு போட்டிகளில் பங்கிற்காமல் மூன்றாவது டி20 போட்டியில் தான் சேர்க்கப்பட்டார்.
இது போல் பல முடிவுகள் எடுக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. இந்த விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்க்கல், வாய்ப்புக்காக காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், வீரர்களை தேர்வு செய்யும் போது அது எப்போதுமே ஏமாற்றத்தை சிலருக்கு கொடுக்கத்தான் செய்யும். அதை சில நேரத்தில் கட்டுப்படுத்தவே முடியாது. சில வீரர்களை பிளேயிங் லெவனுக்கு கொண்டுவர முடியாத சூழல் இருக்கும்.
ஆனால் நாங்கள் இப்படி வாய்ப்பு கிடைக்காத வீரர்களிடம் தொடர்ந்து கடினமாக முயற்சி செய்யுங்கள். வாய்ப்பு வரும்போது தயாராக காத்திருங்கள் என்றுதான் கூறுகிறோம். டி20 உலக கோப்பைக்கு முன் நாம் கொஞ்சம் போட்டிகள் தான் விளையாடுகிறோம். எனவே இருக்கும் போட்டிகளில் சில வீரர்களை பயன்படுத்தி நெருக்கடியான சூழலில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்பது முக்கியமாக மாறுகிறது.
அர்ஸ்தீப் சிங் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் அனைத்தையும் புரிந்து கொள்வார். பல்வேறு ஆடுகளத்தில் விளையாடும் போது அதற்கு ஏற்ற மாதிரி தான் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். உலகத்தரம் வாய்ந்த வீரராக இருக்கும் அர்ஸ்தீப் சிங் பவர் பிளேவில் எங்களுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருக்கிறார்.
அவர் எங்கள் அணியின் எவ்வளவு மதிப்பை சேர்க்கிறார் என்று நாங்கள் அறிவோம். நிதிஷ் குமார் தற்போது முழு உடல் தகுதியை எட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்தையும் நன்றாக செயல்படுகிறார். அவருடைய உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதை முடிவு செய்த பின் தான் அவரை அணியில் சேர்ப்போம். உலகக் கோப்பைக்கு முன் சரியான வீரர்கள் காம்பினேஷனை கண்டுபிடிப்பது தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். தொடரை வெல்வதெல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான் என்று இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.