பெங்களூர் : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் வீசிய ஓர் ஓவரில் போட்டி தலைகீழாக மாறியது.
அதுவரை சேஸிங்கில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி அந்த ஓவருக்கு பின் கடும் அழுத்தத்தில் சிக்கியது. இந்தியாவின் வெற்றிக்கு காரணமும் இந்த சம்பவம் தான்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 160 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்யத் துவங்கியது ஆஸ்திரேலியா. ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்த பென் மெக்டேர்மாட் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்தார்.

15வது ஓவரில் அவரது விக்கெட்டை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். ஆஸ்திரேலியா அப்போது 5 விக்கெட்கள் இழந்து 116 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து மேத்யூ ஷார்ட் - மேத்யூ வேட் களத்தில் இருந்தனர். அவர்கள் இருவருமே அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர்கள் என்பதால் இந்திய அணிக்கு அப்போதும் அழுத்தம் இருந்தது.
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 45 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில், 17வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் மேத்யூ ஷார்ட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தில் டிவார்ஷூஸ் டக் அவுட் ஆனார். இந்த இரண்டு பந்துகளில் 2 விக்கெட்கள் விழுந்த நிலையில், ஆஸ்திரேலியா 129 ரன்களுக்கு 7 விக்கெட்கள் என்ற மோசமான நிலைக்கு சென்றது.
அடுத்து பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால் கேப்டன் மேத்யூ வேட் அதற்கு அடுத்த ஓவரில் மூன்று ஃபோர் அடித்தார். ஆனாலும் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் மேத்யூ வேட் தானே முழு ஓவரையும் ஆட திட்டமிட்டு, பவுண்டரி அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகேஷ் குமார் எடுத்த அந்த இரண்டு விக்கெட்கள் தான் போட்டியை மாற்றியது. முகேஷ் குமார் இந்தப் போட்டியில் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.