மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க கடுமையாக போராடிய நிலையில், இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் நிதிஷ்குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தினார்.இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து இருக்கிறது. இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் ரோகித் சர்மா மூன்று ரன்களிலும், கே எல் ராகுல் 24 ரன்களிலும் விராட் கோலி 36 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 82 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதை அடுத்து இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ரிஷப் பண்ட் 28 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் வெளியேற இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க போராடியது.
அப்போது எட்டாவது விக்கெட்டுக்கு இணைந்த வாஷிங்டன் சுந்தர் நிதிஷ்குமார் ஜோடி அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் நெருக்கடியை சமாளித்தது. இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது. அபாரமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதம் அடிக்க, நித்திஷ் குமார் ரெட்டி சதம் நெருங்கும்போது அடுத்தடுத்து இரண்டு விக்கெட் விழுந்தது.
இதனால் நிதிஷ்குமார் ரெட்டி 99 ரன்களில் ஒரு முனையில் மாட்டிக் கொள்ள, அவர் சதம் அடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கம்மின்ஸ் வீசிய மூன்று பந்துகளை அவுட் ஆகாமல் நிற்க அடுத்த ஓவர் எதிர்கொண்ட நிதிஷ் குமார் ரெட்டி பவுண்டரி அடித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
அப்போது மைதானத்தில் இருந்த அவருடைய தந்தை கண்ணீர் சிந்தி தனது மகனின் வெற்றியை கொண்டாடினார். இதனை அடுத்து மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு பிறகு கில்கிறிஸ்டிடம் பேசிய நிதிஷ்குமார் தந்தை முட்டியாலா ரெட்டி, இது தமக்கு மிகவும் ஸ்பெஷலான நாள் என்றும் இந்த சதத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
சதம் அடிப்பாரா என்ற பதட்டத்தில் இருந்ததாகவும் சிராஜ் சதம் எடுக்க உதவியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். தனது மகன் நிதிஷ் குமார் ரெட்டியை பெரிய கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வேலையை முட்டியாலா ராஜினாமா செய்திருக்கிறார். விசாகப்பட்டினத்தில் இருந்தபோது முட்டியாலா ரெட்டிக்கு வேறு இடத்திற்கு பணி மாறுதல் கிடைத்து இருக்கிறது.
தான் வேறு இடத்துக்கு சென்றால் மகனால் கிரிக்கெட் விளையாட முடியாது என்று அவருடைய தந்தை பணியை ராஜினாமா செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பத்தின் நிதி நிலை மிகவும் மோசமாக இருந்தும், தந்தை அது குறித்து நிதீஷ் குமார் இடம் தெரிவிக்கவில்லையாம்.
ஒரு கட்டத்தில் எம்எஸ்கே பிரசாத் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் உதவி கிடைக்க நிதீஷ் குமார் ரெட்டி ஒரு கிளப்பில் இணைந்து அங்கு மூன்று வேளை உணவு, கல்வி கிரிக்கெட் என அனைத்தும் இலவசமாக கிடைத்திருக்கிறது.
அதுவரை கிரிக்கெட்டை ஜாலியாக விளையாடி வந்த நிதிஷ் தனது தந்தை மற்றும் குடும்பத்தினருக்காக சாதிக்க வேண்டும் என சீரியஸாக விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் தான் தந்தை பட்ட கஷ்டத்திற்கு மெல்போர்ன் டெஸ்டில் கிரிக்கெட்டில் சதம் அடித்து நன்றி கடனை தீர்த்திருக்கிறார்.