மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் நீண்ட நாள் தேடலுக்கு இளம் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி பதிலாக வந்திருப்பதாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். நிதிஷ் குமார் ரெட்டிக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், நம்பர் 6 பேட்ஸ்மேனாக விளையாடும் அத்தனை தகுதியும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி, பேட்டிங்கில் 298 ரன்களையும், பவுலிங்கில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

21 வயதிலேயே நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக ஆடியிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதன் மூலமாக இந்திய அணி நீண்ட நாட்களாக தேடி வந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரையும் கண்டறிந்துவிட்டது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா இல்லாமல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.
இதன் காரணமாகவே சிவம் துபே உள்ளிட்டோர் உடனடியாக டி20 உலகக்கோப்பைக்காக தயார் செய்யப்பட்டனர். அது இந்திய அணிக்கு மிகச்சிறந்த பலனை கொடுத்த நிலையில், தற்போது நிதிஷ் குமார் ரெட்டி டெஸ்ட் அணிக்கு தயாராகி வருகிறார். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பேசுகையில், இந்திய அணிக்கு மிகச்சிறந்த திறமையான ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளங்களில் அறிமுகமாகி ரன்களை குவிப்பது எளிதான விஷயமல்ல. இந்த பாராட்டுகள் அவர் சதம் விளாசியதற்காக மட்டுமல்ல. அவர் சதம் அடிப்பதற்கு முன் தொடர்ச்சியாக 40 ரன்களை குவித்து வந்திருக்கிறார். ஆனால் அவரின் சதம், மொத்தமாக இந்திய அணி நிர்வாகத்தில் இருப்பவர்களின் சிந்தனையை மாற்றிவிட்டது. அவரை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நிதிஷ் குமார் ரெட்டியால் நம்பர் 8, நம்பர் 7, நம்பர் 6 என்று எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட முடியும். என்னை பொறுத்தவரை அவர் தொடர்ச்சியாக நம்பர் 6 பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. இந்திய அணி நீண்ட காலமாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சனைக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி வந்திருக்கிறார் என்று பாராட்டியுள்ளார்.
ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ள நிதிஷ் குமார் ரெட்டி, அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து நிதிஷ் குமார் ரெட்டியையும் விளையாட வைக்க தேர்வு குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.