மெல்போர்ன்: நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, இந்திய அணியின் பேட்ஸ்மேன்களிலேயே அதிக ரன் குவித்து அசத்தினார். மேலும், இந்த டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களிலேயே அதிக ரன் குவித்த வீரராகவும் இருக்கிறார். அதன் மூலம், முன்னாள் தேர்வுக் குழு தலைவருக்கு சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறார்.
இந்திய அணியில் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார் நிதிஷ் குமார் ரெட்டி. இந்த தொடரில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் நிலையில்லாமல் ஆடி வரும் நிலையில் முதல் மூன்று போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் ஓரளவு ரன் சேர்த்து சில விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார் நிதிஷ் குமார்.

ஆனால், அணிக்கு வெற்றி தேடித் தரும் வகையிலான ஆட்டத்தை அவர் ஆடவில்லை. இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்தார். மூன்று போட்டிகள் வரை அவர் சராசரியாக ஒரு இன்னிங்ஸ்-ற்கு 40 ரன்கள் என்ற அளவில் தான் ரன் சேர்த்து இருந்தார். அதே போல அதிக விக்கெட்களையும் வீழ்த்தவில்லை.
இந்த நிலையில் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத், "நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அணிக்கு வெற்றி தேடி தரும் வீரர் இல்லை. அவரால் அணிக்கு எந்த பயனும் இல்லை. அவருக்கு பதிலாக ஒரு ஸ்பெஷலிஸ்ட் வீரரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். சுப்மன் கில்லை அவருக்கு பதிலாக ஆட வைத்து இருக்கலாம்." எனக் கூறி இருந்தார்.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் எட்டாம் வரிசையில் இறங்கி நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்து, இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களிலேயே அதிக ரன் குவித்த வீரராக மாறி இருக்கிறார். இந்த தொடரில் நிதிஷ் குமார் 6 இன்னிங்ஸ்களில் 284 ரன்கள் குவித்து இருக்கிறார். இதன் சராசரி 71 ஆகும். அடுத்த இடத்தில் இருக்கும் ஜெய்ஸ்வால் 7 இன்னிங்ஸ்களில் 275 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது சராசரி 45.83 ஆகும்.
நிதிஷ் குமார் ஆட்டத்தால் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆபத்திலிருந்து தப்பியதுடன் 350 ரன்களையும் தாண்டி ஸ்கோர் எடுத்தது. இதன் மூலம் நிதிஷ் குமார் ரெட்டி தனது பேட்டிங்கால் எம்எஸ்கே பிரசாத்துக்கு சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறார். இது பற்றி சமூக வலைதளங்களிலும் பலரும் எம் எஸ் கே பிரசாத்தை விமர்சித்து வருகின்றனர்.