மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி நீக்கப்பட உள்ளதாகவும், அவரது இடத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்கவுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்கவுள்ள ஆட்டம் என்பதால், ஸ்பின்னர்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 2012ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒன்றில் கூட தோல்வியடைந்ததில்லை.

2018ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுடன் இணைந்து விஹாரியும் ஸ்பின்னராக செயல்பட்டார். அது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் 2021ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் அசத்தலாக செயல்பட்டு வெற்றிபெற வைத்துள்ளனர்.
ரன்களை விட்டுக் கொடுக்காமல் கட்டுக்கோப்புடன் வீசக் கூடிய ஸ்பின்னரால் மெல்போர்ன் மைதானத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த போட்டியிலேயே ஜடேஜா பவுலிங்கில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், பேட்டிம்ங்கில் அசத்தலாக விளையாடி 77 ரன்களை விளாசினார்.
இதனால் அவரை நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் பெர்த் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் அசத்தலாக செயல்பட்ட போதும், பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த 2 ஸ்பின்னர்களையும் பாக்ஸிங் டே டெஸ்டில் களமிறங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதேபோல் இருவருமே பேட்டிங்கிலும் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கக் கூடியவர்கள்.
இதனால் இந்திய அணி இம்முறை 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன்படி நட்சத்திர ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள நிதீஷ் குமார் ரெட்டி, 5 இன்னிங்ஸ்களில் 179 ரன்கள் உட்பட 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பின் இந்திய அணிக்காக அதிக ரன்களை நிதீஷ் குமார் ரெட்டி தான் விளாசி இருக்கிறார். கீழ் வரிசையில் பேட்டிங் ஆடுவதால், அவருக்கு போதுமான உதவி கிடைப்பதில்லை. இல்லையென்றால் பெரிய ஸ்கோரை நிதீஷ் குமார் ரெட்டியால் எளிதாக விளாச முடியும். இந்த நிலையில் நிதீஷ் குமார் ரெட்டியை நீக்கும் முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்திருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.