கேன்பரா: ஆஸ்திரேலியாவுக்கு டி20 தொடரில் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, கழுத்துப் பிடிப்பு காரணமாக இந்த தொடரின் முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட தொடை தசைநார் காயத்திலிருந்து அவர் மீண்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள கழுத்து வலி, அவருக்கு தடையாக அமைந்துள்ளது.
தொடை தசைநார் காயம் காரணமாக, சிட்னியில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், டி20 தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியைப் பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் திடீர் காயம் அவரது வருகை தள்ளிப்போகக் காரணமாகியுள்ளது.

இந்தத் தொடரில் மூத்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி அணிக்குச் சமநிலை கொடுக்கும் முக்கிய வீரராகக் கருதப்பட்டார். அவரது அதிரடி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அவரும் காயமடைந்துள்ளதால், இந்திய அணி தனது திட்டங்களையும், அணியின் கட்டமைப்பையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர்களும் காயம் அடைந்துள்ளனர்.
இருப்பினும், பிசிசிஐ மருத்துவக் குழுவின் தகவல்படி, நிதிஷ் குமார் ரெட்டி தொடரின் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்குள் குணமடைந்து அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஏற்கனவே, சிவம் துபே பிளேயிங் லெவனில் இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பும்ரா, சிவம் துபே, ஹர்ஷித் ராணா என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி இருக்கிறது. அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி என மூன்றி சுழற் பந்துவீச்சாளர்களும் அணியில் உள்ளனர்.