மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவங்களிலும் விளையாடுவதற்கு தகுதியுள்ள ஒரே வீரர் ஜெய்ஸ்வால் மட்டும்தான் என்று கிரிஸ் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார். ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறிய ஸ்ரீகாந்த், விரைவில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இளம் வீரர் ஹர்சித் ராணாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என்று 3 வகையான போட்டிகளுக்கும் ஹர்சித் ராணாவை கம்பீர் தயார் செய்து வருகிறார். ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளில் ஹர்சித் ராணாவின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் மற்றும் கிரிஸ் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் ஹர்சித் ராணா கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். இந்திய அணியின் 3 வகையான போட்டிகளிலும் விளையாட ஹர்திக் ராணாவுக்கு தகுதியே இல்லை என்று விமர்சித்தனர். இதற்கு கம்பீர், 23 வயது இளம் வீரரை அட்டாக் செய்யாமல், என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்து கொள்ளுங்கள் என்று ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்திய அணிக்காக 3 வகையான போட்டிகளிலும் விளையாடக் கூடிய ஒரே வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்று கிரிஸ் ஸ்ரீகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்ரீகாந்த் பேசுகையில், இந்திய அணிக்காக 3 வகையான போட்டிகளிலும் விளையாடக் கூடிய வீரராக ஜெய்ஸ்வால் மட்டுமே இருக்கிறார். அதற்கு 100 சதவிகிதம் கியாரண்டி.. டி20 கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலின் ரெக்கார்ட்ஸ் சிறப்பாக உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செயல்படுவார். ஜெய்ஸ்வால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். அதேபோல் மித வேகப்பந்துவீச்சாளர்களை அசால்ட்டாக சிக்சருக்கு விளாசி தள்ளுகிறார் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மாற்று தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் கேப்டன் சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இணை தொடக்க வீரர்களாக களமிறங்குவதால், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே ஜெய்ஸ்வால் ஆடி இருக்கிறார். இதனால் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன.
ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பல்வேறு சம்பவங்களை செய்துள்ளார். இதனால் விரைவில் இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.