மும்பை: வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை விடவும், அவரின் சிந்தனை திறன் மற்றும் மனநிலையை நினைத்தே ஆச்சரியம் கொண்டதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். என்னதான் திறமை இருந்தாலும், ஐபிஎல் தொடரின் அறிமுகப் போட்டியில் எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தது சாதாரண விஷயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்திய யு19 அணியின் சூப்பர் ஸ்டார் வீரராக வைபவ் சூர்யவன்ஷி வளர்ந்து வருகிறார். இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடினாலே, 17 வயதில் இந்திய சீனியர் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகிவிடுவார். இதனால் சச்சின் டெண்டுல்கரை போல் வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி கட்டாயம் ராஜஸ்தான் அணிக்காக விளையாட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து ஏலத்தில் வாங்கிய ராகுல் டிராவிட், அவர் குறித்து பல்வேறு விஷயங்களை கூறி இருக்கிறார். அதில் ராகுல் டிராவிட் பேசுகையில், வைபவ் சூர்யவன்ஷியிடம் திறமை இருப்பது உண்மை தான். அது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் திறமையை விடவும் அவரின் மனநிலை தான் ஆச்சரியம் அளிக்கிறது. ஏனென்றால் கிரிக்கெட் வீரர்களுக்கு நம்மால் என்ன மனநிலையில் விளையாட வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க முடியாது. அதனை அவர்களாகவே கற்றுக் கொள்ள வேண்டும். நம்மால் செய்ய முடியும் என்பதை நம்ப வேண்டும். ஒரு பயிற்சியாளராக வைபவ் சூர்யவன்ஷிக்கு அத்தனையும் சொல்லி புரிய வைக்க நான் விரும்பவில்லை.
அதற்கு பதிலாக அவருக்கான களத்தை கொடுத்து சுதந்திரமாக விளையாட வைக்க வேண்டும் என்று நினைத்தேன். வலைப்பயிற்சியின் போது அவருக்கு சில சவாலான ஃபீல்ட் செட் வைத்து, வித்தியாசமான மற்றும் சவாலான சூழல்களை அமைத்து பயிற்சி கொடுத்தோம். அவரைப் போன்ற இளம் வீரர்களுக்கு நாம் எதையும் சொல்லி கொடுக்க முடியாது.
அவரால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று சுதந்திரத்தை கொடுக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் களமிறங்கி ஆடிய முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தது ஆச்சரியம்தான். உண்மையில் வைபவ் சூர்யவன்ஷியின் பக்குவம் அவருக்கு ஒரு கிப்ட் என்றே நினைக்கிறேன். ஷர்துல் தாக்கூர் பந்தில் சிக்ஸ் அடித்தது சாதாரண விஷயம் அல்ல. சர்வதேச கிரிக்கெட்டில் ஷர்துல் தாக்கூர் மிகப்பெரிய வீரர் என்று தெரிவித்துள்ளார்.