மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, அணியிலிருந்து நீக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு வீரரை, அடுத்த ஒருநாள் தொடரிலேயே நீக்கியதற்கு, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறிய காரணம், கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜடேஜாவின் நீக்கம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஜித் அகர்கர், "ஜடேஜா நிச்சயமாக எங்கள் திட்டங்களில் இருக்கிறார். ஆனால், அணியில் இடம்பிடிக்கக் கடும் போட்டி நிலவுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அங்கிருந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்பட்டதால், அவர் அணியில் இருந்தார். ஆனால், ஆஸ்திரேலியாவில் அவ்வளவு சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை. வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் இருக்கும்போது, ஒரே மாதிரியான மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் தேவையில்லை என்று நினைக்கிறோம்" என்று விளக்கமளித்தார்.
அகர்கரின் இந்தக் காரணம், கேட்பதற்கு மிகவும் விசித்திரமாகவும், ஒரு முன்னணி வீரரை அவமதிப்பதைப் போலவும் உள்ளது. ஜடேஜாவை ஒரு கூடுதல் சுமையாக (Extra Baggage) தேர்வுக் குழு பார்க்கிறதா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. அவர் வெறும் சுழற்பந்து வீச்சாளர் மட்டுமல்ல; வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் ஜாம்பவான் ஆல்-ரவுண்டர். உலகின் தலைசிறந்த ஃபீல்டர். பேட்டிங்கில் கீழ் வரிசையில் இறங்கி, ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்.
கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படும்போது மட்டுமே அணியில் எடுப்பதற்கு, ஜடேஜா என்ன அணியின் 12-வது வீரரா? ஒரு வீரரின் திறமையையும், அனுபவத்தையும் விட்டுவிட்டு, அணியின் சமநிலைக்கு (Team Combination) அவர் உதவுவாரா? என்பதை மட்டும் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்பதே பல முன்னாள் வீரர்களின் கேள்வியாக உள்ளது.

சுப்மன் கில்லுக்கு ஒரு நியாயம், ஜடேஜவுக்கு ஒரு நியாயமா? என தேர்வுக் குழுவின் இந்த முடிவில் உள்ள இரட்டை நிலைப்பாட்டையும் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். சுப்மன் கில்லை ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு கேப்டன் மற்றும் துணை கேப்டனாக நியமித்ததற்கு, இங்கிலாந்தில் அவரது சிறப்பான ஆட்டம்தான் காரணம் என்று தேர்வுக் குழு கூறுகிறது. அதே இங்கிலாந்து தொடரில் ஜடேஜாவும் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதை ஏன் மறந்துவிட்டார்கள்?
அதே போல தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த துருவ் ஜுரலுக்குப் பரிசாக, ஒருநாள் அணியில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வெஸ்ட் இண்டீஸ் தொடரில்தான் ஜடேஜாவும் சதம் அடித்து, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆனால், அவருக்குக் கிடைத்த பரிசு என்ன? ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
சுப்மன் கில், துருவ் ஜுரல் ஆகியோருக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜாவுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது? ஒரு வீரரின் சமீபத்திய ஃபார்மை வைத்துத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றால், அந்த விதி தொடர்ந்து ஃபார்மில் இருக்கும் ஜடேஜாவுக்கு மட்டும் ஏன் பொருந்தவில்லை?
ஜடேஜா போன்ற ஒரு மேட்ச்-வின்னரை, இதுபோல கையாள்வது இந்திய கிரிக்கெட்டின் நீண்ட கால நலனுக்கு உகந்தது அல்ல. விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை என்பதால் அவர்கள் ஒதுக்கப்பட்டனர். ஆனால், ஜடேஜா இப்போதும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தேர்வுக் குழு, தங்களது முடிவுகளை எடுப்பதில் வெளிப்படைத்தன்மையையும், சீரான நிலைப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.