மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை வைத்து இந்திய அணி விஷப் பரிட்சையில் ஈடுபடுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் காயத்திலிருந்து திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் லீக் ஆட்டத்தில் விளையாடினார்.
ஆனால் அதில் அவர் பெரிய ஸ்கோர் ஏதும் அடிக்கவில்லை என்றும் அந்தப் போட்டியில் நடுவரிசையில் விளையாடிய இஷான் கிஷன் தான் ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்பு ஸ்ரேயாஸ் மேட்ச் ப்ராக்டிஸ் வேண்டும் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என பி சி சி ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மிகப்பெரிய தவறான முடிவு என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே இஷான் கிஷன் அந்த நடுவரிசையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் அரை சதம் அடித்து அணியை காப்பாற்றியிருக்கிறார். இந்த நிலையில் இசான் கிசனை தூக்கி விட்டு ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்ப்பது மிகப்பெரிய தவறான முடிவு என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் ஜடேஜாவை தவிர வேறு யாரும் இல்லை.
இதனால் இஷான் கிஷன் கண்டிப்பாக அணியில் இருப்பது தான் சரியான முடிவாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்திய அணி நிர்வாகமும் இசான் கிஷனை மூன்றாவது தொடக்க வீரராக தான் அணியில் எடுத்திருக்கிறது என தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் நடுவரிசையில் முன்னுரிமை வழங்காமல் ஸ்ரேயாஸுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான வீரர் என்றாலும் அவர் காயத்திலிருந்து திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் முக்கிய ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார். ஆனால் இஷான் கிசன் தொடர்ந்து நான்கு முறை அரைசதம் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார். இதன் காரணமாக இஷான் கிசனுக்கு நடு வரிசையில் உலக கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.