சென்னை: இந்திய டி20 அணியின் கேப்டனாக சுப்மன் கில் எதன் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார் என்று கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சுப்மன் கில்லின் வருகையால் இந்திய அணியின் பேலன்ஸ் மாறிவிட்டதாக கூறிய ஸ்ரீகாந்த், சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மாவின் நிரந்தர பேட்டிங் வரிசை எது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிலும் துணைக் கேப்டன் சுப்மன் கில் 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் சுப்மன் கில் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்ததில் இருந்து சுப்மன் கில் 9 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், அவரின் பேட்டிங் சராசரி 24.14ஆக மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே கேப்டன் சூர்யகுமார் யாதவ் மோசமான ஃபார்மில் இருக்கும் சூழலில், தற்போது துணைக் கேப்டனும் மோசமான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் பேசுகையில், அடுத்த 3 போட்டிகளில் இருந்தும் சுப்மன் கில்லை நீக்க மாட்டார்கள். இந்திய அணி நிர்வாகத்திற்கு எதைப் பற்றியும் கவலை கிடையாது. டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு சுப்மன் கில் தான் துணைக் கேப்டன் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் இந்தியடி20 அணியின் எதிர்கால கேப்டனும் அவர்தான்.
அதுவும் முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான். அதனால் இந்திய அணி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவருஅன் தான் விளையாஅ வெண்டும். அவரின் ஆட்டத்திற்கு ஏற்றபடி இந்திய அணியின் பேலன்ஸை பார்த்துக் கொள்ள வேண்டும். எதன் அடிப்படையில் சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக நியமனம் செய்தார்கள்?யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறகை விரித்து பறக்க காத்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் அவன் இந்திய அணியிலேயே இல்லை.. சுப்மன் கில்லின் இணைப்பு காரணமாக இந்திய அணியின் பேலன்ஸில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாஸிலேயே சிக்கலுடன் தான் இந்திய அணி களமிறங்குகிறது. சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் நிரந்தரமான பேட்டிங் ஆர்டர் கிடையாது. அர்ஷ்தீப் சிங்கும் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதில்லை.
ஆனால் இந்திய மண்ணில் டி20 உலகக்கோப்பை நடப்பதால், இந்திய வீரர்கள் தப்பிப்பார்கள். அபிஷேக் ஷர்மாவை போல் ஏராளமான வீரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர்களால் நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் ஜெய்ஸ்வால் ஆடுவதற்கான சூழல் இல்லை.
இனி ஹர்திக் பாண்டியா மட்டுமே பிளேயிங் லெவனிற்குள் வர முடியும். ஆனாலும் எனக்கு ஏன் ஜெய்ஸ்வால் மட்டும் இன்னும் சிறந்த ரெக்கார்ட் வைத்தும், டி20 அணியில் விளையாடவில்லை என்று புரியவில்லை. அவருக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால், பவுலர்கள் அனைவரையும் விளாசி தள்ளிவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.