மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கம்பீர் கூறிய ஒற்றை வார்த்தை தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்ததாக தமிழக வீரர் சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் நீ என்று கம்பீர் கூறியதாகவும், ரன்கள் சேர்க்கவில்லை என்றாலும் அடுத்தப் போட்டியில் நீ விளையாடுவாய் என்று நேரடியாக கூறியதாகவும் சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தலாக ஆடி வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன். இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பெரிதாக சோபிக்காத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் ரன்களை அடிக்காமல் ஏமாற்றினார்.

தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 87 ரன்கள் எடுத்து சதத்தை மிஸ் செய்தார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 2 அரைசதங்கள் உட்பட 273 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இருப்பினும் இந்திய அணியில் சாய் சுதர்சன் மீது தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்து தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாய்ப்பு அளித்து வருகிறார்.
அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா ஏ அணியுடன் இந்திய ஏ அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில் சாய் சுதர்சன் பேசுகையில், இந்திய அணியின் பயிற்சியாளர்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகின்றனர். உங்களுக்காக ஒரு சம்பவத்தை கூட குறிப்பிட முடியும்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நாங்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தோம். நெட்ஸில் கடைசி வீரராக பேட்டிங் செய்ய தயாராகி நின்றேன். பேட்டிங் செய்ய போவதற்கு முன்பாக கவுதம் கம்பீர் என்னை திடீரென அழைத்தார். அப்போது கம்பீர், ரன்கள் எடுக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்க தேவையில்லை.
இந்திய அணியில் விளையாட நீ தேர்வு செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. இந்தியாவில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களில் நீயும் ஒருவன். அதனால் சிந்தனையை வேறு எங்கும் அலையவிடாதே.. இந்தப் போட்டியில் என்னால் சேர்க்க முடியுமா.. அப்படி சேர்க்க முடியவில்லை என்றால், என்ன நடக்கும்? என்று யோசிக்காதே..
நிச்சயம் நீ அடுத்தப் போட்டியில் விளையாடுவார் என்று தெரிவித்தார். கம்பீர் அப்படி என்னிடம் நேரடியாக கூறிய போது, என் மனதில் நம்பிக்கையுடன் சுதந்திர உணர்வும் அதிகரித்தது. என்னால் இன்னும் கவனம் செலுத்த முடிந்தது. ஒரு பயிற்சியாளரிடம் இருந்து அப்படியொரு வார்த்தை வரும் போது, எல்லாமே சரியாக இருக்கும். அங்குள்ள சூழலே மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.