சிட்னி : 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக பார்க்கப்படுவது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தான். ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் எந்த அணியுமே டெஸ்ட் தொடரில் சாதிப்பது கடினம் என்று கருதப்படும் நிலையில், இந்தியா மட்டும் தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்றிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதில்லை.

இந்த சூழலில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கண்டிப்பாக கைப்பற்றுவோம் என்ற உத்வேகத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருக்கிறார். இதற்காக எட்டு வாரம் கடும் பயிற்சியில் ஈடுபட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த ஒரு கோப்பையை மட்டும் தான் தாம் கைப்பற்றவில்லை என்றும் பாட் கம்மின்ஸ் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு மிகவும் முக்கிய பங்காற்றுப் போகும் இரண்டு வீரர்கள் யார் என்பது குறித்து பாட் கம்மின்ஸ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் எங்கள் அணியில் ஆல் ரவுண்டர்கள் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சில சமயம் எங்கள் அணியில் இருக்கும் ஆல்ரவுண்டர்களை சரியான முறையில் பயன்படுத்தவில்லையோ என்ற நினைப்பு எனக்கு எப்போதுமே இருக்கிறது.
அது உண்மையிலேயே நல்ல விஷயம் தான். நாங்கள் கடந்த கோடை காலத்தில் பெரிய அளவில் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் வித்தியாசமான சூழலாக இருக்கும். இதனால் கேமரன் கிரீன், மிட்செல் மார்ஸ் ஆகியோரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் உள்ளூர் தொடரில் சாதாரண கிரிக்கெட் வீரராக கேமரன் கிரீன் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். தற்போது அவர் சர்வதேச அளவில் பல அனுபவங்களை பெற்று இருக்கிறார். கேமரன் கிரீன்,மிட்செல் மார்ஷ் எங்கள் பேட்டிங் வரிசையில் டாப் ஆறு இடத்தில் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வசதியை கொடுக்கும்.
இதேபோன்று நாதன் லயான் சுழற் பந்துவீச்சாளராக அதிக ஓவர் வீசுவார். ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் அவர்களை ஐந்தாவது பந்துவீச்சாளராக நாங்கள் பயன்படுத்துவோம். தற்போது மிச்சல் மார்ஸ் கேமரான் கிரீன் என இரண்டு வீரர்கள் இருப்பதால் அவரை நாங்கள் ஆறாவது பவுலராக கூட பயன்படுத்தலாம்.
மேலும் இந்த இரண்டு வீரர்களும் பேட்டிங்கும் செய்வார்கள் என்பதால் அது எங்களுக்கு கூடுதலான நன்மைகளை கொடுக்கும். இந்த இரண்டு வீரர்களும் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய முக்கிய பங்காற்றுவார்கள் என நம்புவதாக பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.