அடிலெய்ட் : இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பெர்த் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி பார்முக்கு திரும்பியதற்கான காரணத்தை தற்போது கூறியிருக்கிறார். இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக சிராஜ் விளங்கினார். எனினும் சிராஜ் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தடுமாறினார்.
நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெறும் ஆறு விக்கெட் மட்டும் தான் சிராஜ் எடுத்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் சிராஜ் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் சிராஜ் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்டில் சேர்க்கப்பட்டார்.

அதில் சிராஜ் அபாரமாக பங்கு வீசினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிராஜ்,தாம் இந்திய மைதானங்களில் விளையாடும் போது ஆடுகளத்தின் போதிய உதவி கிடைக்காததால் நான் சோர்வடைந்தேன்.பந்து வீச்சு எனக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா ஆடுதளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது.
இதனால் நான் தற்போது மகிழ்ச்சியாக பந்து வீசி வருகிறேன். அது மட்டுமில்லாமல் எங்களுடைய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்க்கல், நீ ஒரு போராளி! நிச்சயம் அணிக்கு நீ விக்கெட்டுகளை எடுத்து தருவாய். ஆனால் அதற்கு நீ பந்துவீச்சை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும் என்று கூறினார். இதேபோன்று பும்ராவும் எனக்கு நல்ல உறுதுணையாக இருந்தார்.
பும்ராவிடம் நான் தொடர்ந்து பந்து வீச்சு குறித்து பேசி வந்தேன். நான் அவரிடம் எனக்கு என்ன நடக்கிறது? என்னுடைய சிக்கல் என்ன என்பது குறித்து நான் பேசினேன். அப்போது பும்ரா எனக்கு வழங்கிய அறிவுரை உதவிகரமாக இருந்தது. விக்கெட்டுகளைத் தேடி நீ போகாதே! தொடர்ந்து ஒரே மாதிரி பந்துவீசு உன்னுடைய பந்துவீச்சை நீ மகிழ்ச்சியாக செய்!இதை நீ செய்தும் உனக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றால் பிறகு என்னிடம் வந்து கேள் என்று கூறினார்.
இதனை அடுத்து,என் பந்துவீச்சை நான் மகிழ்ச்சியாக செய்தேன். தற்போது எனக்கு விக்கெட்டுகள் கிடைக்கிறது. தொடர்ந்து பயிற்சி செய்தால் நிச்சயம் நம்மால் மெருகேற முடியும்.பிங்க் பந்து சிவப்பு நிற பந்தை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. எனினும் நாங்கள் இந்த இளஞ்சிவப்பு பந்தை வைத்து பயிற்சி செய்து வருகிறோம். இரவு நேரத்தில் பிங்க் நிற பந்து ஸ்விங் ஆகும் என்று சொன்னார்கள். நான் இன்னும் இரவில் இங்கு பந்து வீசவில்லை. பயிற்சியில் அதை நான் செய்வேன் என்று சிராஜ் கூறியுள்ளார்.