மெல்போர்ன்: இந்தியா ஏ அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா முதல் ஓவரில் இரண்டு அடுத்த அடுத்த பந்துகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தி அதிர வைத்தார். இதை அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான உத்தேச இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பெயரும் இடம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார். அடுத்து இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ஏ அணி 168 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது. அப்போது முதல் ஓவர் வீசிய பிரசித் கிருஷ்ணா இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் மார்கஸ் ஹாரிஸ் மற்றும் கேமரான் பான்கிராப்ட் என இரண்டு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தினார்.
இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தாங்கள் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அடைந்தனர். சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி அவர்கள் விக்கெட்களை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணாவுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முதன்மை வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் முகமது சிராஜ் இடம் பெற்று உள்ளனர். சில போட்டிகளில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் வரியா தேவை என்பதால் கூடுதலாக ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில் ஆகாஷ் தீப் வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பந்து வீசியதால் மூன்றாவது பந்துவீச்சாளராக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது. பிரசித் கிருஷ்ணா நான்காவது பந்துவீச்சாளராக சில போட்டிகளில் விளையாடக் கூடும். ஹர்ஷித் ராணா இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடாத நிலையில் அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமே.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.