கவுஹாத்தி : மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா கடைசி பந்தில் தோல்வி அடைந்த நிலையில், கடைசி ஓவரை வீசிய இந்திய பவுலர் தான் தோல்விக்கே காரணம் என அவரை கட்டம் கட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.
அவருக்கு பந்து வீசவே தெரியவில்லை, குறிப்பாக யார்க்கர் பந்துகளை அவர் வீசவே இல்லை என ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 போட்டி கவுஹாத்தியில் நடைபெற்றது. அதிக ரன்கள் குவிக்க ஏற்ற ஆடுகளத்தில் போட்டி நடந்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெயிக்வாட் தன் முதல் டி20 சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 14வது ஓவர் வரை விக்கெட்களை இழந்தாலும் ரன் ரேட் 10-ஐ ஒட்டியே இருக்குமாறு பார்த்துக் கொண்டது. கிளென் மேக்ஸ்வெல் களத்தில் இருந்த நிலையில், அவருடன் கேப்டன் மேத்யூ வேட் 14வது ஓவரில் இணைந்தார். அந்த ஜோடி அபாரமாக ஆடியது. குறிப்பாக மேக்ஸ்வெல் சில பந்துவீச்சாளர்களை குறி வைத்து தாக்கி அதிரடியாக ரன்களை குவித்தார்.
எனினும், இந்தியாவுக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில் வேறு யாருக்கும் ஓவர் இல்லாததால் ஸ்பின்னர் அக்சர் படேல் வீச, அந்த ஓவரில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வேறு ஸ்டம்பிங் செய்கிறேன் என பந்தை ஸ்டம்ப்புக்கு முன்னே வந்து பிடித்தார். அது விதி மீறல் என்பதால் நோ பால் வேறு கிடைத்தது. அடுத்த ஃப்ரீ ஹிட்டில் மேத்யூ வேட் சிக்ஸ் அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் போனது.
19வது ஓவரில் நிறைய சொதப்பல் நடந்தாலும் கூட கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில், அப்போதும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. கடைசி ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச வந்தார். அவர் கடைசி ஓவர் என்ற பதற்றத்தில் இருந்த நிலையில் அவரால் சரியாக ஒரு யார்க்கர் கூட வீச முடியவில்லை. சரியான லென்த்தில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.
மேக்ஸ்வெல் கடைசி நான்கு பந்துகளில் மட்டும் ஒரு சிக்ஸ், மூன்று ஃபோர் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தார். இதை அடுத்து இந்தியாவின் தோல்விக்கு சரியாக பவுலிங் வீசாத பிரசித் கிருஷ்ணா தான் காரணம் என ரசிகர்கள் அவரை விளாசி வருகிறார்கள். அவரால் ஒரு யார்க்கர் கூட வீச முடியவில்லை என ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சனம் செய்த நிலையில், ஒரு கட்டத்தில் "யார்க்கர்" என்பதே டிரெண்டிங்கில் வந்து விட்டது.
பிரசித் கிருஷ்ணா இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுக் கொடுத்து இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதைக் ரன்கள் விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை செய்தார்.