மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சுப்மன் கில் அல்லது நிதீஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்பட உள்ளதாகவும், அந்த வீரருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடதுகை பவுலர்களை மட்டுமே பவுலிங் செய்ய வைத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதேபோல் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஏனென்றால் மெல்போர்ன் மைதானத்தில் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க இந்திய அணி முடிவு செய்துள்ளது. கடந்த முறை அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் விளையாட் வெற்றியை பெற்று கொடுத்தனர். இதனால் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் கேஎல் ராகுலை நம்பர் 3ல் களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. ஏனென்றால் தொடக்க வீரர்களில் ஒருவர் ஆட்டமிழந்தாலும், நம்பர் 3ல் களமிறங்கும் வீரர் தான் இன்னிங்ஸை செட் செய்ய வேண்டும். இதனால் கேஎல் ராகுலை நம்பர் 3ல் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் நம்பர் 4ல் விராட் கோலி மற்றும் நம்பர் 5ல் ரிஷப் பண்ட் களமிறங்குவார்கள்.
நம்பர் 6ல் நிதீஷ் குமார் ரெட்டி அல்லது சுப்மன் கில், நம்பர் 7ல் ரவீந்திர ஜடேஜா, நம்பர் 8ல் வாஷிங்டன் சுந்தர், நம்பர் 9ல் ஆகாஷ் தீப் களமிறங்குவார்கள். இதன்பின் பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் விளையாடுவார்கள் என்பது நிச்சயம். இதன்படி நிதீஷ் குமார் ரெட்டி அல்லது சுப்மன் கில் இருவரில் ஒருவர் கண்டிப்பாக நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
நிதீஷ் குமார் ரெட்டியை பொறுத்தவரை 5 இன்னிங்ஸ்களில் 179 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணியின் 4வது வேகப்பந்துவீச்சாளராகவும் செயல்பட முடியும். ஆனால் சுப்மன் கில்லை பொறுத்தவரை 3 இன்னிங்ஸ்களில் 60 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதேபோல் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் சுப்மன் கில் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வரவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டாப் ஆர்டர் தவிர்த்து சுப்மன் கில் இதுவரை வேறு எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாடிய அனுபவம் கிடையாது. இருந்தாலும் கடைசி நேரத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், நிதீஷ் குமார் ரெட்டி அல்லது சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பும்ரா, முகமது சிராஜ்